Sunday, September 12, 2010

விவசாய பம்ப் செட்டுகளுக்கு விரைவில் மீட்டர்: அதிர்ச்சியில் விவசாயிகள் - சிவ. மணிகண்டன்

கோவை: விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீட்டர் பொருத்தும் நடவடிக்கை வரும் காலத்தில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதில் கொண்டு வந்துவிடும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர்.

விவசாயிகளுக்குப் புதிதாக மின்மோட்டார்கள் இலவசமாக மாற்றித் தரப்படும் எனமுதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் விவசாய பம்ப் செட்டுகள் திறன் குறைவாக இருப்பதால், மின்சாரம் அதிகமாகச் செலவாகிறது என்றும், மின்பற்றாக்குறை ஏற்படுவதற்கு இந்த பம்ப் செட்டுகளும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சத மானியத்திலும் மின்மோட்டார்கள் மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மின்மோட்டார் வழங்கும் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. மின்வாரியம் மூலமாக விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், உற்பத்தித் திறன் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மோட்டார்களின் தரம் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதில் அளித்த ஆட்சியர், மின்சேமிப்புத் திறன் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மின்மோட்டாருக்கான தொகை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சேமிப்புத் திறனை கண்டறிவதற்காக புதிய மோட்டார்கள் வழங்குவதற்கு முன்பே விவசாய பம்ப் செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இப்போது மின்வாரிய அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், விவசாய மின் இணைப்பு பெற்ற வருடம், இணைப்பு பெறும்போது பயன்படுத்திய மோட்டாரின் குதிரைத் திறன், தற்போது பயன்படுத்தும் மோட்டாரின் குதிரைத் திறன் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் பம்ப் செட்டுக்கு மீட்டர் பொருத்துவதற்கு சம்மதமா எனக் கேட்கப்பட்டிருக்கிறது.

பழைய மோட்டாருக்கும், புதிதாக வழங்கும் மோட்டாருக்கும் உள்ள மின்சேமிப்புத் திறனை மீட்டர் பொருத்தினால்தான் கணக்கிட முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், மீட்டர் பொருத்திவிட்டால் மின்உபயோகத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம், இல்லாவிட்டால் கட்டணம் எனப் படிப்படியாக இலவச மின்சாரம் இல்லாத நிலைக்குப் போய்விடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலர் கந்தசாமி கூறியது: மீட்டர் பொருத்தினால் மட்டுமே மின் உபயோகத்தைக் கணக்கிட முடியும் என்பதல்ல. மின் உபயோகத்தை அளவிட நவீன கருவிகள் வந்துவிட்டன. ஒரு மணி நேரத்தில் மோட்டார் ஓடியதை வைத்தே கணக்கிட்டுவிடலாம்.

இப்போது மழை இல்லாத காரணத்தால் பம்ப் செட்டுகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அடுத்த இரு மாதங்களில் பருவமழை வந்துவிடும் என்பதால் பமப் செட்டுகள் பயன்பாடு பெரிய அளவுக்கு இருக்காது. இச்சூழலில் தற்போது மீட்டர் பொருத்தி கணக்கிடுவதும், இன்னும் இரு மாதங்களில் புதிய மோட்டார்கள் வழங்கியதும் அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரியானதாக இருக்காது.

அதோடு, மீட்டர் பொருத்துவதால் வரும் காலங்களில் இலவச மின்சாரம் படிப்படியாக குறைக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் இடையே பரவலாக இருக்கிறது என்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இலவச மோட்டார் வழங்குவதற்காக பெரிய, நடுத்தர, சிறு-குறு விவசாயிகள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்புதான் தற்போது நடைபெற்று வருகிறது.

பாசன நிலம், பயன்படுத்தும் மோட்டாரின் குதிரைத் திறன் ஆகிய விவரங்களை மட்டுமே சேகரித்து வருகிறோம். மற்ற விஷயங்களை அரசுதான் முடிவு செய்யும் என்றனர்.

Monday, July 19, 2010

தனியார் மயமாகிறதா மின்வாரியம்? க. தங்கராஜா

First Published : 19 Jul 2010
சேலம்: தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே ஆள் பற்றாக்குறையால் வேலைப்பளுவில் தவிக்கும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

÷தமிழகத்தில் 1.41 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்பட 2.12 கோடி மின் இணைப்புகள் உள்ளன. கடந்த 2000-ம் ஆண்டில் 1.20 கோடி மின் இணைப்புகள் இருந்தன. ஆனால் 10 ஆண்டுகளில் மின் இணைப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் அதற்கேற்ப மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.÷2002-ம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் பேராக இருந்த மின்வாரியப் பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 75 ஆயிரமாகக் குறைந்துள்ளது. முதல் வகுப்பு ஊழியர்களான மேல்நிலைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்களின் எண்ணிக்கை கடந்த 2002-ல் 795 ஆக இருந்தது.

÷இரண்டாம் வகுப்பு ஊழியர்களான உதவிப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் எண்ணிóக்கை 8,171 ஆகவும் இருந்தது. 3-ம் வகுப்பு ஊழியர்களான தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகவும், உதவியாளர்கள் நிலையிலான 4-ம் நிலைப் பணியாளர்கள் சுமார் 53 ஆயிரம் பேர் இருந்தனர்.

÷தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2,547 மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் இருக்க வேண்டிய நிலையில், இப்போது 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேட்டூரில் 1,728 ஊழியர்கள் பணியிடம் இருக்கும் நிலையில் 1,267 பேர் மட்டுமே இப்போது பணியில் உள்ளனர். எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 1,600 பணியிடங்களில் 779 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். வட சென்னையில் 1,974 இடங்கள் உள்ள நிலையில் 1,029 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

÷கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓய்வு பெறும் பொறியாளர்கள், ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இப்போது பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு பணிச்சுமை மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் எதுவும் பயனுக்கு வராமல், தொடர்ந்து காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.

÷மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மேட்டூர், எண்ணூர், வடசென்னை பகுதிகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மேற்பார்வை செய்வதற்காக, தரப் பரிசோதனை செய்வதற்காக, தனியாக ஆட்களை நியமிக்கவில்லை. சரியான மேற்பார்வை இல்லாததே மின் திட்டங்கள் பயனுக்கு வருவதை தாமதப்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பதாக அதிகாரிகள் குறை கூறுகின்றனர்.

÷நிலைமை இப்படி இருக்க, மேலும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது மின்வாரிய நிர்வாகம். தலைமைப் பொறியாளர் முதல் உதவியாளர் வரையிலான சில பதவியிடங்களை சரண்டர் செய்யுமாறும் பணியாளர்களை 60 ஆயிரமாகக் குறைப்பதே இலக்கு என்றும், கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு மின்வாரியத் தலைமை உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிóக்கின்றன.

÷இதேபோல் சில பணிகளை அவுட்சோர்சிங் விடவும் மின்வாரியம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடசென்னையில் நிலக்கரியை ரயில்களில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பும் பணியை தனியாரிடம் ஒப்படைத்த மின்வாரியம் இப்போது வரை பிரச்னையையே சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களை நியமித்து பணிகளைச் செய்யத் திட்டமிட்டு இருப்பதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, July 12, 2010

ரூ.3,000 கோடி கடன் வாங்கிய கருணாநிதி!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33676

உலக வங்கியில் கடன் வாங்கி குவித்தார் முதல்வர் ! சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்: தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச்சுத் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதவர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பயனாக, 564 கோடியே 94 இலட்ச ரூபாய் உலகவங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 78 லட்ச ரூபாயும் சேர்ந்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல் படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கருப்பைவாய்ப் புற்று நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், இதய நோய்த் தடுப்புத் திட்டம், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைத்திட்டத்திற்குக் கூடுதல் ஆம்புலன்ஸ் ஊர்திகள், அமரர் ஊர்தி சேவைத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்: அதேபோல, 1,670 கோடி ரூபாய் உலகவங்கி உதவியுடன் 490 கோடி ரூபாய் தமிழக அரசின் பங்கும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை இணைக்கும் 13 புறவழிச்சாலைகளை உள்ளடக்கிய 725 கிலோ மீட்டர் நீளச்சாலைகளை மேம்படுத்துதல்; 1,033 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்; நெடுஞ்சாலைத்துறையின் நிறுவன அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி உதவி வழங்கி, 2012ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை உலக வங்கி ஏற்றுக்கொண்டு 232 கோடியே 67 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின: அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 49 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்குகிறது. இதன் காரணமாக, 1,903 கோடி ரூபாய் உலக வங்கி நிதியும், 539 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் திருத்திய திட்ட மதிப்பீட்டில் 31.3.2012 வரை இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்றுநடைபெற்ற இந்த இரண்டு ஒப்பந்தங்களுள், தமிழ்நாடு சுகாதாரத்திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச்செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோர் கையொப்பம் இட்டனர்.

சாலை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலைத் துறைத் துறைச் செயலாளர் சந்தானம், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோரும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்கு நருமாகிய முனைவர் விஜயகுமார், நிதித்துறை சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநருமாகிய தியாகராஜன், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு, மக்கள் நலனிற்கு உண்மையாக எத்தனை கோடிகள் சென்றடையும்? இதெல்லாம் சரிதான், ஆனால் இத்தனை கோடிகளில் எத்தனை மக்களின் நலனிற்க்காகச் செல்லப்போகிறது, எத்தனை கோடிகளை கழகக் கண்மணிகள் அமுக்கப் போகின்றன என்பதனையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும். இத்தனை கோடிகள் கடனாகப் பெற்றால், யார் செல்லுத்தப் போவது? கோடிகளில் கமிஷன் பெற்று பயனாளிகளாக வாழ்க்கையை அனுபவிக்கப்போவது, ஆர்டர்கள் பெறும் கழகக் கண்மணிகள்தாம்! பிறகு மக்களுக்கு என்னக் கிடைக்கப் போகிறது?

Thursday, June 24, 2010

உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா

வியாழக்கிழமை, ஜூன் 24, 2010, 12:38[IST]

டெல்லி: உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், கோசி ஆறு சீரமைப்பு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் கடனுதவி அளிக்க உள்ளது உலக வங்கி.

Monday, April 19, 2010

நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடு அமைப்பின் உடனடி செயல்திட்டத்திற்கான 10அம்ச கோரிக்கைகள்

1.விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆதாரமான நிலம், நீர், விவசாயம், கால்நடை, காடுகள் பாதுகாக்கப்படவெண்டும்.

2.ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற பொது நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டப்படி அகற்றப்பட்டு அதனுடைய முழுமையான கொள்ளளவு அடிப்படையில் தூர்வாரப்படவேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஏரி, குளம் தூர்வாறுதல் போன்ற பணிகளை கட்டாயம் இரண்டான்டுகளுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

3.இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தும் விதமாக இதுவரை கம்பெனிகளுக்கு உரமானியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் மனியங்கள் நிறுத்தப்பட்டு, பயிர்களின் வகைக்கேற்ற ஒவ்வொரு ஏக்கருக்கும் இவ்வளவு என நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யவேண்டும்.
உற்பத்தி செலவு, லாபத்தை உள்ளடக்கிய வருடம் முழுவதற்குமான சீரான ஞாயமான ( Fair Price) விலை நிர்ணய முறை உற்பத்தி செய்யும் இடங்களிலேயே விற்பனை செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படவேண்டும்.

4.இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எல்லா பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கான காப்பீட்டு திட்டத்தை வருடம் முழுவது செயல்படுத்த வேண்டும்.

5.விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்குமான உழவர் பாதுகாப்பு திட்டத்தை விட ஒருபடி மேலான திட்டத்தை முறையாக செயல்படுத்தி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் கொடுக்கவேண்டும். மேலும் இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் எந்தவித நிபந்தனைகளும் இன்றி கல்விகடன் கொடுக்கவேண்டும்.

6.விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாய் தங்களுடைய நிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் மரங்களை நட ஊக்குவிக்கும் விதமாய் தேசிய காலநிலை மாற்ற தடுப்பு திட்டத்தில் (கிரீன் இண்டியா) விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்

7.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்திற்கு 3% வட்டியில் விவசாய கடன் கொடுக்கவேண்டும்.

8.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை விவசாயப்பணிகளுக்கு விரிவுபடுத்தி, 50% விவசாயிகளின் பங்கேற்புடன் செயல்படுத்தவேண்டும்.

9. கிராமப்புற மக்களின் அடிப்படை தொழில், நாட்டின் உணவு உற்பத்தி, பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் என்ற அடிப்படையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

10.மரபுசாரா எரிசக்தியை விவசாயத்துடன் இணைத்து தற்சார்பு விவசாயத்திற்கு வித்திடவேண்டும்.

SLFA மாநில பிரதிநிதிகள் கலந்தாலோசனை கூட்டம்

தேதி:பிப்ரவரி, 11, 12 (வியாழன், வெள்ளி), 2010
இடம்:டீநோபிளி பாஸ்டோரல் சென்டர், கே.புதூர், மதுரை


கலந்தாய்விற்கான பின்னணி:
நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு (Joint Action for Sustainable Livelihood – JASuL) – ஜாசூல் அமைப்பு கடந்த இரண்டாண்டு காலமாக நாமது கிராமப்புற வாழ்வாதாரங்களான நிலம், நீர், விவசாயம், கால்நடை, காடு வளர்ப்பு போன்ற கிராமப்புறமக்களின் அடிப்படை கட்டுமானங்களை பாதுகாப்பது, நிலைத்த தன்மையுடன் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (IAMWARM) என்ற பெயரில் பாசன நீரை தனியார் மயமாக்கும் உலகவங்கியின் முன்முயற்சிகள் குறித்தும், வெளியிடு பொருட்கள் குறைவான அல்லது செலவு குறைச்சலான விவசாயம் குறித்தும், காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழகத்தின் பலபகுதிகளில் உள்ள சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மத்தியில் பயிற்சிகள், கருத்தரங்கள், விவசாயிகளுடனான நேரடி சந்திப்புகள் வாயிலாக விவசாயிகள் மத்தியில் பிரச்சாரபணிகளை முன்னெடுத்து வருகிறது.

அத்துடன் இன்றைய உலகமயம், தாரளமயம், தனியார்மயச்சூழலில் விவசாய அமைப்புகளின் பங்கு, போட்டி நிறைந்த, சந்தைக்கான உற்பத்தி என்ற மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு, இன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்கு சாதகமான கொள்கைகள் குறித்தான சிந்தனையை விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக உலகவங்கியின் பாசன தண்ணீரை தனியார்மயமாக்கும் முயற்சியினை அம்பலப்படுத்தும் விதமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.

31துணைவடிநிலப்பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மண்டல விவசாயிகள் - சமூக செயல்பாட்டளர்களுக்கான தமிழ்நாடு நீர்நிலவள திட்டம் (IAMWARM) குறித்த கலந்தாய்வு கூட்டம் 2008 மே மாதம் 16, 17 தேதிகளில் மதுரை பீல் பண்ணை, சாக்கிளிபட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலகமய கண்ணோட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனை அணுக கூடிய, கிராமப்புற வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் ஆக்கபூர்வமான பணியில் ஈடுபடக்கூடிய ஓர் விவசாய அமைப்பினை உருவாக்கவேண்டியதன் தேவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் ( Sustainable Livelihood Faramers Association - SLFA ) என்ற அமைப்பை ஏற்படுத்து என்ற கோரிக்கை தென்மாவட்ட விவசாயிகளால் முன்மொழியப்பட்டு பின்னர் வடக்கு மண்டல விவசாயிகளுக்கான விழுப்புரம், திருப்பத்தூர் கூட்டம், மத்திய மண்டல விவசாயிகளுக்கான பெரம்பலூர் கூட்டங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தந்த மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதல் SLFA அட்காக் கமிட்டி கூட்டம் 2009 மார்ச் 26ம் தேதி ஜாசூல் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SLFA அமைப்பை மாநில அளவில் உருவாக்குவது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது. இச்சங்கம் மாநில அளவில் விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணய கோரிக்கையையும் உள்ளடக்கிய, விவசாய பிரச்சனைகளைகளின் உலகப்பின்னணியை உள்ளூர் கண்ணோட்டத்துடன் அணுக கூடிய ஒரு மாறுபட்ட விவசாயிகளின் அமைப்பாக செயல்படவேண்டும் என எல்லோராலும் இக்கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம அளவில், துணைவடிநிலப்பகுதி அளவில், மாவட்ட அளவில் என பல்வேறு விவசாயிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் செயல்படுத்தப்படுகின்ற 19 மாவட்டங்களில் உள்ள விவசாய செயல்பாட்டாளர்கள் மத்தியில் தொடர் செயல்பாட்டிற்கான ஒத்த சிந்தனையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்டவர்கள் மத்தியில் செயல்பாட்டு ரீதியான உறவுகளை ஜாசூல் அமைப்பு கடந்த ஒருவருட காலமாக பேணி வந்துள்ளது.

இவ்வுறவுகளையும், ஒத்த சிந்தனைகளையும் அமைப்புரீதியாக கொண்டுவரும் முகமாக மாநில அளவிலான விவசாயிகள் கலந்தாலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி 11, 12 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஏற்கெனவே மாவட்ட அளவில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விவசாய தலைவர்களில் இருந்து இருவர் வீதம் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் நடைபெறாத மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு விவசாயியும் அழைக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து பணிசெய்யும் ஒரு சமூக செயல்பாட்டளரும் என மொத்தம் 105 பேர் அழைக்கப்பட்டனர். 105பேரில் 70 பேர் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டம் மேற்சொன்ன தேதிகளில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் விபரம் பின்வருமாறு.

முதல் நாள் அமர்வு (11/02/2010):
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமதி. சாந்தி அவர்களின் வரவேற்புறைக்கு பின் கலந்தாய்வு கூட்டம் சரியாக 10.30 மணிக்கு துவங்கியது. அதனை தொடர்ந்து கலந்தாய்விற்கான பின்னணி குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜன் விளக்கினார்.

அதன்பின்னர் இந்தியா விவாசாய நெருக்கடி என்ற தலைப்பில் கருத்துரை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ஒய். டேவிட் இக்கருத்துரைக்கு தலைமை தாங்கினார். விவசாய நெருக்கடி குறித்து திருச்சி மண்டல அமைப்பாளர் திரு.சிவப்பிரகாசமும், விதை மற்றும் உணவு நெருக்கடி குறித்து நிலைத்த விவசாய செயல்பாட்டாளர் திருச்சி ராஜாராம் உரையாற்றினார். அவரை தொடர்ந்து நிலம் அன்னியமாதல் என்ற தலைப்பில் திரு. சி.ப. வேணு, சேலம் மண்டல அமைப்பாளரும், கம்பெனி விவசாயம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் தனராஜ் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் விளக்கமளித்தனர். டாக்டர். மாரிமுத்து, சென்டெக்ட் கிருஷி விக்கியான் கேந்திரா அவர்களின் நிறைவுறைக்கு பின் முதல் அமர்வு நிறைவு பெற்றது.

மதிய உணவுக்கு பிந்தைய நீர் நெருக்கடி என்ற இரண்டாம் அமர்விற்கு இயற்கை விவசாயி மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான திரு. ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். முதலில் தமிழகத்தின் நீர்வள ஆதாரங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜீ உரையாற்றினார். அவரை தொடர்ந்து பாரம்பரிய நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. நாதன் உரையாற்றினார். அடுத்ததாக பருவநிலை மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ள நீர், விவசாய நெருக்கடிகளும் என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் அமைப்பாளரும், குடுமக்கள் உலக அரங்கு - தமிழ்நாடு அமைப்பினை சேர்ந்த திரு. பாமயன் என்ற பாலசுப்பிரமணி அவர்கள் உரையாற்றினார். இறுதியாக நீர்வள மேம்பாட்டிற்கான பெருந்திட்டங்களும் அதன் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் மானாமதுரை ஒன்றிய கவுன்ஸ்லர் மற்றும் பொறியாளருமான திரு. பாலசுப்பிரமணி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜனும் இணைந்து உரையாற்றினர்.

ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்பு விவசாயிகளின் கருத்துப்பகிர்விற்கான அமர்வு திரு. எம். எஸ், ஜெயராஜ், ராமநாதபுரம் மண்டல அமைப்பாளரின் தலைமையில் கூடியது. இவ்வமர்வில் விவசாயிகள் தங்களுடைய விவசாய அனுபவங்கள், குடும்ப பின்னணி, இன்றைய கருத்துரை நிகழ்வுகள் குறித்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவு உணவுக்கு பின் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேராழிகள் குறித்தான ருத்திரம் 2015 என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

இரண்டாம் நாள் அமர்வு (12/02/2010):

பங்கேற்பாளர்களின் வேண்டுகோளுக்கினங்க, பாசன விவசாயிகள் சங்கம், அமைப்பு, செயல்படும் முறைகள் குறித்து அடவிநயனார் அணைக்கட்டு நீர் பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் கொடிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவரும் பொறியாளருமான திரு. செல்லத்துரை அவர்கள் விளக்கமளித்தார். பங்கேற்பாளர்களின் நேரடி கேள்விகளுக்கு பொறியாளர் பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து உதாரணங்களுடன் விளக்கினார். இவ்வமர்வினை மாநில ஒருங்கினைப்பாளர் மாரிராஜன் ஒருங்கிணைத்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நிரல்படி அமர்வுகள் துவங்கின. முதலாவதாக ஏன் இந்த SLFA விவசாய சங்க முயற்சி என்ற தலைப்பிலான அமர்விற்கு சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ஜான்சன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ஒய். டேவிட் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையில், நமது விவசாய வரலாற்றை உற்றுநோக்கினால் விவசாயம் என்றுமே விவசாயிகளின் கையிலேயே இருந்தது என்ற வரலாற்று உண்மை புரியும் என்றார். விவசாயம் சம்பந்தப்பட்ட முடிவுகள், குறிப்பாக விதைகள், இடுபொருட்கள் சம்பந்தமான முடிவுகள் விவசாயிகளாலேயே எடுக்கப்பட்டது. மன்னர்கள் குளங்களை வெட்டி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஒத்தாசை புரிந்துள்ளனர். நீர்பகிர்மானங்கள் குடிமராமத்து என்ற முறையில் உள்ளூர் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டது. எக்காலத்திலும் நீர் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட விசயங்கள் மையப்படுத்தப்பட்டதில்லை. அவை பரவலாக்கப்பட்டே இருந்துள்ளன. அதனால் தான் நம்மால் இன்று வறட்சி மாவட்டங்கள் என அழைக்கப்படும் மாவட்டங்களில் கூட எக்டேருக்கு 16 டன் வரை மகசூல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சாதனையை இன்றைய பல்கலை கழகங்கள், பசுமை புரட்சிகள், இரண்டாம் பசுமை புரட்சிகளால் எட்டிக்கூட பார்க்க முடியாது. நிலம், விவசாயத்தின் மீதான இந்த வன்முறையான புரட்சிகள் ஏற்படுத்திய விளைவு நம்முடைய நிலங்களின் வளமிளப்பு மற்றும் மலட்டுதன்மைதான். நமது பாரம்பரியம் என்றுமே நிலைத்த தன்மையுடையதாய், சூழலுக்குகந்ததாய் எல்லோரலும் உற்பத்தியில் ஈடுபடக்கூடியதாய் மட்டுமே உற்பத்திமுறை இருந்து வந்துள்ளது.

நிலைத்த தன்மையுடைய நம்முடைய பாரம்பரியமுறை ஆங்கிலேயர் காலத்தில் வரிவசூலூக்க வேண்டி மையப்படுத்தப்பட்டதன் விளைவே பஞ்சம், உணவு பற்றாக்குறை, அரிசி இறக்குமதி என்று நாடு சின்னாபின்னப்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்கள் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமான வேலைகள் செய்யப்பட்டன. அதன் விளைவுதான் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம், நில உச்சவரம்பு சட்டம், குறைந்த பட்ச கூலி சட்டம், சிறு, குறு விவசாயிகள் மேம்பாட்டுக்கான வட்டார வளர்ச்சி திட்டங்கள் போன்றவைகளாகும். ஆனால் காலப்போக்கில் அரசின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக இந்திரா காந்தி காலத்தில் வெளிநாட்டு கடன் வாங்க தொடங்கிய பின் சுயசார்பு கொள்கைகளில் இருந்து முற்றிலுமாக வெளியேற தொடங்கினோம். 1990களில் முற்றிலும் சுயசார்பை கைவிட்டு சந்தைப்பொருளாதாரத்தை பின்பற்ற துவங்கி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 25வருடங்களில் விவசாயிகள் மத்தியில் சந்தைப்பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் கணக்கில் அடங்கா.

எல்லாவற்றிற்கு முத்தாய்ப்பாய் ஒன்றறை லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசின் குற்ற ஆணையம் (Crime Bureo) தன்னுடைய வருடாந்தர அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாங்கும் திறன் அற்றுப்போய் உள்ளனர். ஆனால் ஆளும் தரப்பினர் நாடு வளருகிறது. 8% வளர்ச்சியை அடைந்துவிட்டோம். இதை இரட்டை இலக்கமாய் மாற்றினால் வல்லரசாகிவிடலாம் என முழங்குகின்றனர். இங்கு எது வளர்ச்சி என்ற கேள்விக்கு விடை தேவைப்படுகிறது. வளர்ச்சி குறிப்பிட்ட சதவிதத்தினரை மட்டும் சார்ந்த்தா அல்லது எல்லோருக்குமான என்ற கேள்விகள் எழும்புகின்றன. இவ்வளர்ச்சியின் இலக்கணம் பொருள் உற்பத்தியை சார்ந்ததா அல்லது சேவைத்துறையை சார்ந்ததா, என்ன மாதிரியான பொருளுற்பத்தி, சேவை என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணப்படாத வரை இன்றைய விவசாய பிரச்சனைகள் மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட முடியாது.

இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை தேட வேன்டிய வரலாற்று தேவையை தமிழகத்தில் நிறைவு செய்யவேண்டிய பணி இங்கு கூடியுள்ள விவசாயிகளுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் உண்டு. அதற்கான ஒரு விவசாய இயக்கமாக இந்த நிலைத்த வாழ்வாதத்திற்கான விவசாயிகள் சங்கம் திகழ வேண்டும். இவ்வமைப்பு விவசாயிகளின் விளைபொருளுக்கான விலைநிர்ணய பிரச்சனைகளுடன் அதற்கான உலக பின்னணியை கேள்விக்குள்ளாக்கு இயக்கமாக உருவெடுக்கவேண்டும்.

இதனை செயல்வடிவம் கொடுக்கும் விதமாக உலகவங்கி கடனின் கீழ் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவள திட்டத்தை, உலகவங்கியை, மாநில, மத்திய அரசுகளின் தவறான கொள்கைகளை கேள்வி கேட்கும் வகையில் மாநாடுகளை நடத்தி நமது கோரிக்கைகளின் வாயிலாய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது. அதையும் கூட உடனடியாக இந்த ஆண்டே செய்யும் பட்சத்தில் உலகவங்கி திட்டத்தில் மாற்றங்களை செய்யும் வாய்ப்பு உண்டு என்ற வகையில் இதை சரியான தருணம் என்று உணருகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து தேனீர் இடைவேளைக்கு பின் குழுவிவாதம் தொடங்கியது. குழு விவாதத்தை கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு. அப்பாவு பாலாண்டார் வழிநடத்தினார். நீர் மற்றும் உணவு நெருக்கடிக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியான செயல்பாட்டு நெறிமுறைகள், கூட்டு செயல்பாடு என்ற தலைபுகளின் கீழ் தெற்கு, மத்திய, வட மண்டல என குழுக்களாய் தனித்தனியே பிரிந்து விவாதித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

குழு விவாத அறிக்கைகளிலிருந்து நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்க மாநில கலந்தாலோசனை குழு கூட்டத்தின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- மக்களின் தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தெளிவான நீர்க்கொள்கை தேவை. மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டு இக்கொள்கை உருவாக்கப்படவேண்டும். உலகவங்கி, பன்னாட்டு கம்பெனிகள் போன்ற வல்லாதிக்க நிறுவனங்களின் ஈடுபாடு, கொள்கை உருவாக்கும் பின்னணியில் இருக்கக்கூடாது.

- ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஆற்றுப்பாசனம் போன்ற பொதுநீராதாரங்கள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவை சரியான முறையில் பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மேலும் பொது நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டப்படி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

- பொது நீராதாரங்களின் மேலாண்மை அந்தந்த ஆயக்கட்டுதாரர் சங்கங்களிடம் ஒப்படைக்கவேண்டும். பொதுப்பணித்துறையின் தேவையற்ற தலையீடு இன்றி இவ்வமைப்புகளை பலப்படுத்தி குடிமராமத்து முறைகளை மறுஉருவாக்கம் செய்ய பொதுப்பணித்துறை பக்கபலமாக இருக்கவேண்டும்.

- நீராதார அமைப்புகளில் உள்ள வேலிக்கருவேல், மற்றும் சமூகக்காடுகள் திட்ட மரவகைகள் அகற்றப்படவேண்டும். இனிமேல் புதிதாக இவ்வகையான மரங்களை நடக்கூடாது.

- ஆறுகளில் அளவுக்கதிகமாக மணல் அள்ளுவதை தடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை மறுசுழற்சி செய்து விட வேண்டும்.

- பாசான தண்ணீரை வர்த்தகமயமாக்கும் போக்கு உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

- வேளாண்மைக்கான நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான உரிமை விவசாயிகளிடமே இருக்கவேண்டும்.. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பூங்காக்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை கைமாற்றிவிடுவது உணவு உற்பத்தியை பாதிக்கும் என்ற அடிப்படையில் வேளாண் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க கோருகிறோம்.

- விவசாயம் நீடித்ததாகவும், நிலைத்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு இசைந்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் இன்று பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் கைகளில் கம்பெனி விவசாயம் அல்லது கார்ப்பரேட் விவசாயம் என்ற பெயரில் விவசாயம் திணிக்கப்படும் போக்கு மாற்றப்பட்டு உள்ளூர் விவசாயிகளுக்கு சாதகமானதாய் மாற்றப்பட தேவையான கொள்கைரீதியான ஆதாரவு வேண்டும்.

- அனைத்து விதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகளையும் தடைசெய்யவேண்டும். விவசாயிகள் அனைவரும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகளின் கையில் சிக்கிவிடாமல் தடுத்து இயற்கை முறையிலான விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் மண்வளம், நீர்நிலைகளை பாதுகாக்கப்படும், உற்பத்தி அதிகரிக்கும்.

- அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயித்து ஆண்டு முழுவதும் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த வேண்டும்.

- விதைகள் மற்றும் செயற்கையாக மரபணுக்களை மாற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை உடனே தடைசெய்யவேன்டும். இதன் மூலம் விதைகளின் உரிமை பன்னாட்டு கம்பெனிகளுக்கு மாறுவதை தடைசெய்து பாரம்பரிய விதைகளை பாதுகாக்க கோருகிறோம். மத்திய மாநில அரசுகள் நமது விவசாயத்தில் பன்னாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடுவதை தடுத்து பாரம்பரிய விவசாயத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

- விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் களவு போகின்றது அடிப்படையில் நமது விவசாய பல்கலை கழகங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மரபணு மாற்ற விதை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

- விவசாயக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் விவசாயிகளுக்கு தேவை. ஆனால் அவற்றின் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்கும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாத கம்பெனிகளுக்கு சாதகமான ஆய்வுகளில் ஈடுபடும் போக்கு தடுத்து நிறுத்தப்படவேண்டும். விவசாயிகளோடு இணைந்து கற்றுக்கொள்ளவும் ஆய்வு செய்யவும் அதைப்பகிர்ந்து கொள்ளவும் ஏற்ற மனப்பான்மை விவசாய கல்லூரிகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் வரவேண்டும். இல்லையெனில் இன்றைய விவசாயிகள் விரோத விவசாய கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.

- வெளிநாட்டு கடன்கள் வாங்குவது போன்ற மிகமுக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அது சம்பந்தமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் கிராம சபைகளில் விவாதிக்கப்பட வேண்டும்

- நாட்டின் ஒரு சிறிய சதவித மக்களின் நலன்களுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை புறக்கணிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுயசார்பு, கிராம தன்னிறைவு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டும்.

குழு விவாதத்திற்கு பின், தொடர்செயல்பாடுகளை வழிநடத்துவதற்கென்று நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு உருவாக்கப்பட்டது. மாநில செயற்குழுவிற்கு மண்டலத்திற்கு மூவர் வீதம் (2 விவசாய தலைவர்கள் + 1 சமூக செயல்பாட்டாளர்) 9பேர் தேர்வு செய்யப்பட்டனர். செல்லத்துரை, ராமநாதபுரம் பாலசுப்பிரமணியம், காவேரி, அப்பாவு பாலான்டார், ஆணைக்கவுண்டர், சிவப்பிரகாஷம், ஜெயச்சந்திரன், ஜெகதீஷன், கோவிந்தராஜ் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாவர். இவர்களை தவிர தேவையின் அடிப்படையில் நியமன உறுப்பினர்களை தேர்வு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக இம்மாநில செயற்குழு கூடி மாநில கலந்தாலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்வடிவம் கொடுப்பது, சங்கத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக வட மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றியுறைக்கு பின் கூட்டம் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
ஆக்கம்:
மாரிராஜன்.தி, மாநில ஒருங்கிணைப்பாளர்,
நிலைத்தவாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு

Ban GM Seeds; Save Indian Agriculture Plea from Sustainable Livelihood Farmers’ Association – TamilNadu

The Sustainable Livelihood Farmers’ Association (SLFA) of TamilNadu has made a plea to the State and the Central government of India that genetically Modified BT Brinjal should not be allowed inside our country since it is a threat to our farmers’ self-reliance and sovereignty. The health of the consumers of BT Brinjal is also at stake.

The State executive committee of SLFA met on 2nd February 2010 in Madurai under the Convenership of Y.David and the following resolutions were passed:

The Central Government has not yet published any of the scientific research findings of the GM Crops. The State has every responsibility to be transparent and share the pros and cons of the GM Crops to the public and especially farmers of our country but the State acts in favour of Monsanto and Mahyco companies.

Countries like Thailand, Australia, Hungary, Venezuela, France, Russia and New Zealand have banned the GM crops in their lands. In India, the states like Chattisgarh, Kerala, Madhya Pradesh, Bihar, Karnataka and Orissa have registered their dissent over the GM Crops.

If we depend on GM seeds for our cultivation, the farmers have to lose their control over seeds and depend on Multinational companies for seeds. We have the experience of farmers in Maharashtra and Andhra Pradesh, who committed suicides in thousands because of BT cotton.

The farmers who cultivate GM crops are advised to cultivate other crops with 50-60m distance but we have to keep in mind that majority of Indian farmers are small and marginal farmers who cannot afford to leave even a piece of their land uncultivated.

When BT Brinjal is cultivated, the pollen in them will get into other varieties of crops cultivated near through the bees and butterflies. The entire agriculture pattern will be affected and GM crops are bane to our farmers.
The International Assessment of Agricultural Science, Technology and Development- IAASTD of United Nations has made a caution note that issues of poverty, hunger, global warming and loss of biodiversity cannot be tackled with GM Crops.

GM Crops will not fulfil the entire need of our country; will not provide safe and healthy food; the soil fertility, which is already depleted because of Green revolution, will be destroyed; and the livelihood of the farmers and environment will not be protected.

With the above understanding of GM Crops, SLFA has resolved to demand a total ban on GM Crops by the State.

Following demands are made to the State by the small and marginal farmers, Agricultural workers and civil society members organised as SLFA in TamilNadu:

- Sale of BT Brinjal seeds in India should be totally banned since we do not have enough researches on the safety of the biodiversity and the hidden agenda in trying with brinjal, a commonly grown vegetable is to try with all other crops in near future, which is a major threat to our food security and sovereignty.

- India had around 12000 varieties of paddy earlier and after Green revolution, it has been reduced to 50 varieties. Similarly around 2000 varieties of brinjal available now may diminish largely which is a great loss to our biodiversity. Hence, BT brinjal has to be banned immediately.

- The State, the Agricultural research Institutes and the Agricultural Universities are responsible to disclose the research findings to the farmers and the public. They are bound to clarify the doubts raised. SLFA demands the concerned Institutes and the scientists should give detailed explanation to the farmers and the public regarding GM crops.

- When genetical modifications happened naturally, it was perceived as science but now in the hands of multinational companies, it has become the international politics. The self reliance and the sovereignty of the country is at stake in the hands of multinationals and SLFA demands that GM Crops research should not be carried forward in collaboration with multinational seed companies.

- As per Indian Constitution, the agriculture comes under the purview of the states and every state government has the right to decide on its cropping pattern. Against the Constitution of India, Genetic Engineering Approval Committee (GEAC) is established and dictates the states of India. SLFA demands the abolition of this committee immediately to ensure the Constitutional rights of the states.

- The public hearing regarding the GM crops should be taken to the grassroot level where the farmers can participate. The Gram Sabha resolutions at Panchayat level should be taken into account to make a decision.

- The testing of GM Crops in the farmers’ fields in Indian land should be immediately stopped and the institutes and companies involved in such testing should be legally sued.

- Indo-American Knowledge Partnership Agreement signed by India with US will submit Indian Agriculture sovereignty to the hands of WAL-MART, MONSANTO, RELIANCE, the multinational companies. This agreement will extend from agriculture to fishing, livestock etc that will seriously affect Indian sovereignty. Therefore, SLFA demands India to withdraw immediately from such agreements.

- The Central Government of India should ban the intrusion of multinational companies in agriculture. In addition, the traditional, organic and sustainable farming practices should be encouraged. The State should ensure that the price for the yield is decided by the farmers and the State and not by the agents inbetween.


/sd/ Y.David
State Convener
Sustainable Livelihood Farmers' Association
No:1, 3rd St, Maruthupandiya nagar, Narimedu,
Madurai -02 Tamilnadu

Sunday, April 11, 2010

அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு

சி.வையாபுரி
First Published : 12 Apr 2010 12:00:00 AM IST

உழன்றும் உழவே தலை என உழவின் உயர்வைக் குறள் சொல்கிறது. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என ஒளவையின் நல்வழி உயர்ந்த வாழ்க்கைக்குத் திசைகாட்டுகிறது. உணவு எனப்படுவது நிலமும் நீரும் என உணவின் பிறப்பிடத்தைக் கூறி உழவனைப் பசிப்பிணி மருத்துவன் என புறநானூறு இலக்கணப்படுத்துகிறது.

குறிஞ்சி என்னும் மலை சார்ந்த வனங்களின் மழை வளத்தால் வழியும் நீர், முல்லை வழி ஆறுகளாகி, மருத நிலத்தில் நகர்ந்து செந்நெல் வயல்களைச் செழிக்கச் செய்தபின் மீன் வளம் பெருகிக் காணும் நெய்தலை ஒட்டிய கடலில் சங்கமிக்கும். மழை வளம் குன்றி குறிஞ்சியும், முல்லையும் வறண்டால் பாலை என சங்கத் தமிழ் நிலங்களை வரிசைப்படுத்துகிறது.

இந்நிலங்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் உணவு முறைகள், உறைவிட வழிகளை எல்லாம் வகை வகையாய்த் தொகுத்து தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

÷நாடு பூராவிலும் பூகோள, மண்வள, இயற்கை தட்பவெட்ப பருவகால மழையின் அளவுகள், தன்மைகளின் அடிப்படையில் பண்டைய அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர்வாரி முறை, மழை நீர், நிலத்தடி நீர் பயன்பாடுகள், பிரதேச உணவுப் பழக்கங்கள் அமைந்தாலன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு கானல் நீராகிவிடும்.

பருப்பு, பயறு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் விளையத்தக்க நிலங்களுக்கெல்லாம் பாசன வசதிகளைச் செய்து கொடுத்த கண்மூடித்தனமான செயல்களால் சாகுபடியில் கரும்பு, நெல் ஒருபுறமும், பருப்பு பயறு எண்ணெய் வித்துகள் மறுபுறமும் நிலைகுலைந்து விளைச்சல் சரிவடைந்தது. எள்ளும், கொள்ளும் விளைந்த நிலங்களில் நெல், கரும்பு என்றானால் மரபுவழி நஞ்சைப் பாசனம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியில் தடுமாற்றங்கள் வராதா?

தினை, சாமை, சீரகம், கடுகு, கேழ்வரகு, பழவகைகள், மூலிகைகள் என்று விளையும் மலைப்பிரதேசங்களில்கூட நிலத்தடி நீரை வைத்து நெல்லும் கரும்பும் பயிரிட அனுமதித்தால் மலைப்பகுதிகளும் விரைந்து வறண்டு, அங்கு வாழும் உயிரினங்கள் தாகத்தால் மடிவது பதற்றமான நிலையல்லவா? நீர், நிலப் பயன்பாடுகளில் சென்ற 35 ஆண்டுகளில் முரண்பாடுகள் முற்றிவிட்டன. புவிவெப்பமும் சேர்ந்து குடிநீருக்காக மலைஉச்சி வன உயிரினங்களும், நிலப்பரப்பு மக்களும் ஒருசேர அலைவதற்கு முற்றிலும் சுயநலத்தை உள்ளடக்கிய பாசனத் திட்டங்களும், நீர்பராமரிப்பும் திறமையற்ற அரசு நிர்வாகங்களுமே மூலகாரணங்கள்.

÷மக்கள் தொகை குறைவாகவும், தட்ப வெப்பநிலை மிதமாகவும், கொண்டுள்ள மேலை நாடுகள் தங்களுக்கு ஏற்புடையது என வகுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் வரம்பின்றி இந்தியாவுக்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் கொண்டு பலதரப்பட்ட தட்பவெப்ப மண்டலங்களையும் அவற்றுக்கு ஏற்புடையதான இயற்கையோடு இயைந்த உணவு மற்றும் உற்பத்தி சாதனங்களையும் புறந்தள்ளினால் வேலை இல்லாத் திண்டாட்டமும், எரிசக்தி பற்றாக்குறையும், சுற்றுப்புறச்சூழல் கேடும் தோன்றிவிடும் என்பதைச் சிந்திக்கத் தவறுவது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு நிகரான நிலைப்பாடாகும்.

இந்தியாவில் மிகைப்பட்ட வேளாண் எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத் தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும்.

நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி ரசாயன உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும் அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள் சூழ்ந்துவிடும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும், கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும் தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான். வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க வேண்டியதாகிறது.

வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும் அகல்வதற்கு இதைவிடவும் வேறு எது சரியானது, எளிதானது.

எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று மூன்று ஆண்டுகளாகத் திரிந்த பத்து வாலிபர்கள் வாய்ப்பு ஏதும் இருந்தால் தங்களுக்கு வழிகாட்டும்படி கேட்டார்கள்.

விவசாய வேலைக்குத் தயாரா என்று வினவியதற்கு தாங்கள் பட்டதாரிகள் என்றும், தங்களிடம் உள்ள நிலங்களில்கூட வேலை பார்க்க விருப்பம் இல்லாமல்தான் வேறு வேலை தேடி அலைவதாகவும் சொன்னார்கள்.

அவர்களில் சிலர் குழந்தைகளோடு இருப்பதும், மனைவியின் கூலியை வைத்தே தங்களது குடும்பம் நடப்பதாகவும் அறிய முடிந்தது. பத்துபேருமே பத்தாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை எதிலுமே சொல்லிக் கொள்ளும்படியாய் மதிப்பெண் பெறவில்லை என்பதை அறிய வேதனை மிகுந்தது.

தகுதி, திறமை என்று எதையும் பெற்றிராத அவர்களிடம் இருந்தது வயதும் உடலும் மட்டும்தான். 10-ம் வகுப்போடு இவர்களை வடிகட்டியிருந்தால் தாங்கள் வாழும் இடங்களிலேயே குலத்தொழில், அல்லது வேளாண்மையில் ஈடுபட்டு இந்நேரம் தக்க அனுபவமும், பயிற்சியும் பெற்று சொந்தக் காலில் நிற்கும் சுயமரியாதையான வாழ்வை உறுதி செய்திருக்க முடியும்.

ஆனால் நம் ஊர் விவசாயத்தில்தான் என்ன இருக்கிறது உழவடை, அறுவடை என்று எல்லாவற்றுக்குமே எந்திரங்கள் புழங்கிவிட்டன. அதனால் உடலுழைப்புக்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன.

மலை முதல் கடற்கரை வரையிலும் இப்போது குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலையும் எப்படி வந்தது என்கிற கேள்வி வலுவடைகிறது. இயற்கை வழி மண்டல வழியான பயிர்வாரி முறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்று உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோக்கிம் வான் பிரெüன் 2008-ம் ஆண்டு கூறியதை தீர ஆராய்வது இப்போது அவசியம் ஆகிறது.

ஆகவே, தேவையை உள்ளடக்கிய தன்னிறைவான உற்பத்திக்கு நதிப்படுகை வழி பயிர்வாரி முறையும், விளைநிலங்களில் இயற்கை சார்ந்த பயிர் சுழற்சி முறையும் அவசியம்.

"பானை சோற்றுக்கு பருக்கை பதம்' என்பதுபோல இதை அந்த பத்து பட்டதாரிகளின் நிலையை வைத்தே இன்றைய நடைமுறைகளை விருப்பு, வெறுப்பின்றி விவாதிக்க வேண்டும்.

மலிவான கல்விச் சாளரங்களின் வழியாய் உயர்கல்வி மாயைக்குள் நுழைந்து பட்டமும் பெற்ற பின்னர் போட்டிகளில் தாக்குப்பிடிக்க முடியாத அநேகர் அந்த 10 பேரைப் போலவே திகைத்துப் போயுள்ளனர்.

சுயநலத்தில் ஆளுமையைத் தொலைத்து நிற்கும் ஆட்சியில், போலி மருந்து தயாரித்து விற்பது போன்ற சமூக விரோதச்

செயல்களுக்கு படித்த பலரும் வலிந்து தள்ளப்படுகிற துயரம் பெருகி வருகிறது. உணவுத் தேடலின் அருமையை இவர்களுக்குப் புரிய வைக்க அரசாங்கம் தவறிவிட்டது.

உற்றுநோக்கினால் 50 சதத்திற்கும் கீழ் பிளஸ் டூ படிப்பிலும் 60 சதத்திற்கு கீழ் பட்டப்படிப்பிலும், 75 சதத்திற்கு கீழ் மருத்துவம், சட்டம், பொறியியல் முதலான உயர் கல்வியிலும் மாணவர்களைச் சேர்ப்பது வேண்டாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்தே தீரவேண்டும்.

பட்டதாரிகளில் பலர் திறமை என்று எதுவுமின்றி எதிலும் நிலைக்க முடியாமல் சும்மா இருப்போர் பெருகுவதால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும்.

ஆக, அனைவருக்கும் கல்வி என்பதை 10-ம் வகுப்போடு அல்லது 14 வயதுக்குள் முடித்துவிடவேண்டும்.

அடுத்தகட்ட படிப்புக்கு விதை நேர்த்தி செய்வதுபோல தேவைக்கு ஏற்றாற்போல் தரம் பார்த்து அனுமதிக்கிற நடைமுறையைத் துணிந்து தோற்றுவிக்க வேண்டும்.

உயர் கல்வி என்பது ஓர் அலங்காரப்பொருள் அல்ல, ஆடம்பரத்துக்கு ஆனதும் கிடையாது, ஒளிரும் அறிவையும், மிளிரும் திறமையையும் மெருகேற்றிக் கொள்கிற அரியதோர் வாய்ப்பு என கருதும் மனப்பாங்கு கொள்கைத் திட்டங்களை வடித்து வழங்கும் அரசாங்கத்திடம் முதலில் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் 10 முதலாளிகளை வலுவடையச் செய்வதைக் காட்டிலும் 10 லட்சம் விவசாயிகளை தலைநிமிரச் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.

வேளாண்மையை மறந்து வெள்ளாமையை இழந்து, விவசாயம் விளங்காத ஒன்று என்று க ருதி உயர்கல்வித் தொழில் முதல் கார் தொழில் வரை வரிச்சலுகைகளைத் தரும் ஆட்சியில் முரண்பாடுகள் முற்றி மக்களின் கும்பி எரிந்து குடலும் கருகிப் போவது உறுதி.

நன்றி- தினமணி

Tuesday, March 2, 2010

வீழ்ந்து கிடக்கும் வேளாண்மை - ப.குணசேகரன்

உணவுக்கு உத்தரவாத மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த இருப்பது வரவேற்க வேண்டிய ஒரு செய்தி. அதேசமயம் அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கும் எந்த உத்தரவாதமும் இல்லாமல் தொடர்கின்ற நிலை வேதனைக்குரியது.

அமெரிக்காவின் பிரெய்ரி பகுதியிலும், ரஷியாவின் ஸ்டெப்பி பகுதியிலும் கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், தென் அமெரிக்காவில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கும், ஐரோப்பிய நாடுகளில் பழத்தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், தென் கிழக்காசிய நாடுகளில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கும் ஒரு சராசரி இந்திய விவசாயி எதிர்கொள்ளும் பிரச்னை எதுவும் கிடையாது.

இந்திய விவசாயத்துக்கு ஆதாரமான பருவமழைதான் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்னை என்பதை மறுப்பதற்கில்லை. பருவக்காற்று முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ வீசினாலும் அல்லது பொய்த்துப் போனாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டும்தான். மேலும், இவற்றின் எதிர்மறை விளைவான வெள்ளம், வறட்சி ஆகியவற்றினாலும் விவசாயிகள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பருவ மழையின் பாதகங்களை நிலத்தடி நீராதாரத்தைக் கொண்டுதான் நமது விவசாயிகள் சமாளித்து வருகின்றனர். அதற்கும் பெரும் சோதனையாக மின்வெட்டு உருவெடுத்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வரை மின்சாரம் வழங்குகின்ற அரசு, விவசாயத்துக்குத் தொடர்ச்சியாகப் பத்து மணி நேரம்கூட மின்சாரம் அளிக்க மறுப்பதால் வேளாண் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்தப் பாசனப் பரப்பில் 44 விழுக்காடு நிலங்கள் கிணற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளன. 90 விழுக்காடு காய்கனிகள் கிணற்றுப்பாசன நிலங்களிலிருந்துதான் விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கான மின்வெட்டின் காரணமாக விளைபொருள் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இப்போதைய விலைவாசி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

பசுமைப் புரட்சியின் சாதனைகளில் முக்கியமானது இந்திய விவசாயிகளை ரசாயன உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பழக்கப்படுத்தி அடிமைகளாக்கியதாகும். ரசாயன உரங்கள் மண்வளத்தையும் நுண்ணுயிர் பெருக்கத்தையும் அழித்ததோடல்லாமல் மறைமுகமாகக் கால்நடை வளர்ப்பையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. கால்நடை வளர்ப்பு என்பது பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக மட்டுமன்றி இயற்கை உரமான சாண எரு உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இயற்கை உரத்தையும் இரட்டிப்பு வருமானத்தையும் வழங்கிய கால்நடைகளின் இடத்தை ரசாயன உரப் பயன்பாடு ஆக்கிரமித்து அழித்து விட்டது. இதனால் பால் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பால் விலை லிட்டருக்கு ரூபாய் நாற்பதை நெருங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தாம் வழங்குகின்ற கடன் தொகையில் 40 விழுக்காடு வரை ரசாயன உரமாக வலிந்து திணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் காரணமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்ற ஒரு சிலரும் ரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து விடுபட இயலாத சூழ்நிலை நிலவுகிறது.

உர நிறுவனங்களுக்கு கோடிகோடியாய் கொட்டிக் கொடுக்கப்படும் மானியத் தொகை விவசாயிகளின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் இன்றுவரை தொடரும் யதார்த்த நிலை. உழுதுண்டு வாழ்ந்தவரை கடனில் உழல வைத்ததில் ரசாயன உரத்தின் பங்கே அதிகம்.

இடுபொருள் செலவே இல்லாத பாரம்பரியமான நமது இயற்கை விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கும் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு கேட்டு வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பதே ஒரு பெயரளவுக்கான திட்டமாகத்தான் இருக்கிறது. பயிர்க்காப்பீட்டு நடைமுறை விதிகள் ஒரு சாதாரண எளிய விவசாயி அணுகக்கூடிய வகையில் அமையவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பல்வேறு சிரமங்களுக்கிடையே விளைவிக்கப்படும் விளைபொருளுக்குப் போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டத்தையே எதிர்கொள்கின்றனர். இடைத்தரகர்களாலும் வியாபாரிகளாலும் விவசாயிகள் சுரண்டப்படும் நிலை தொடர்கிறது. பல மாவட்டங்களில் நியாயவிலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முடங்கிப் போயுள்ளன. இவை மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஓராண்டில் பல மாதங்கள் மூடிக்கிடக்கிற சட்டப்பேரவைக்குப் புதிய கட்டடம் கட்டுகிற அரசு, மாவட்டந்தோறும் காய்கனிகளை நீண்ட நாள்களுக்குப் பாதுகாத்து வைக்க உதவும் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க முன்வர வேண்டும். இதன்மூலம் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறுவதோடு வியாபாரிகளின் சுரண்டலையும் விலை வீழ்ச்சியையும் தடுக்க முடியும்.

மக்கள்தொகை வேகமாகப் பெருகி வருகிற வேளையில் விளைநிலங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருவது, உணவு உற்பத்தியில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். நாடு முழுவதும் விளைநிலங்களை வரையறுத்து அவற்றைத் தொழில் துறை மற்றும் பிறதுறை பயன்பாட்டுக்காக ஆக்கிரமித்தலைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டத்தில் மட்டும் உணவுக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு நடைமுறையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியாத நிலை தொடரும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

அன்னிய முதலீடு இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக எவ்வளவு சலுகைகள் அளிக்க முடியுமோ அவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. வேளாண் துறையிலும் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர குறுக்கு வழி ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலம். அயல்நாட்டு நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேளாண் உற்பத்தியில் ஈடுபட எவ்விதத் தடையுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுவதன் உள்நோக்கமும் அதுவாகத்தான் இருக்க முடியும். இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பரிசோதனைச் சாலைகளாக மாறப்போகும் ஆபத்தும் நம்மை எதிர்நோக்கியே உள்ளது.

வளர்ச்சியின் பலன்களைப் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் சென்றடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற விவசாயிகளுக்கு எந்த மாதிரியான பலன்கள் சென்றடைந்துள்ளன என்பதற்கு பிரதமர்தான் விளக்கமளிக்க வேண்டும்.

மத்திய அரசு கூறி வருகின்ற வளர்ச்சியின் விளைவாக கிராமப்புற விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடும், மின்சாரத் தட்டுப்பாடும், விவசாயக் கூலியாள்கள் கிடைக்காமையும்தான் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு ஆண்டுக்காண்டு கணிசமாகக் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின் இழப்பீட்டுக்காகக் காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி விதைக்காகவும் காத்துக் கிடக்கிற அவலநிலை மரபணு மாற்று விதை நிறுவனங்களால் உருவாகப் போகிறது.

பி.டி.பருத்தியால் விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்ற உண்மையை பி.டி. ரகப் பயிர்களை அனுமதிப்பதற்கு முன்னர் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய வேளாண் தொழில்நுட்பச் சந்தையில் நுழையும்போது அறியாமையிலும் ஏழ்மை நிலையிலும் உள்ள நமது விவசாயிகள் எளிதில் வீழ்த்தப்படுவார்கள்.

தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் விதைகளைப் பரிந்துரை செய்யும் வழக்கத்தை நமது வேளாண் பல்கலைக்கழகங்களும் அதன் விஞ்ஞானிகளும் கைவிட வேண்டும்.

இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் வகுத்தளிக்கும் அறிவியல் நுட்பங்களைக் காட்டிலும் விவசாயிகளின் பாரம்பரியமும் பட்டறிவும்தான் சாகுபடி நுட்பங்களைத் தீர்மானிக்கின்றன. இதனைப் பல்கலைக்கழகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மேலும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத, இடுபொருள் செலவற்ற புதிய சாகுபடி நுட்பங்களை ஆராய்ச்சி செய்யவும், அறிமுகம் செய்யவும் முன்வர வேண்டும்.

வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை. அதனால்தான் வள்ளுவர் "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்றார். வேளாண்மை என்பதே பிறர்க்கு உணவளிக்கும் பெருஞ்சேவை. இத்தகைய பெரிய சேவை புரியும் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான உதவிகளும் உரிய மதிப்பும் வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நமது உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

நன்றி / தினமணி

நம் ஆய்வுகளை நாமே செய்வோம்

எல்லா மாநிலங்களிலும் பரவலாக எதிர்ப்பு தோன்றியதையடுத்து,​​ குறிப்பாக இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டங்களில் காணப்பட்ட ஏகோபித்த எதிர்ப்பைக் கண்டு,​​ மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை அறிமுகம் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.​ இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம் என்ற சொல்லத் துணிவில்லாமல்,​​ தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கும் வேளாண் தொழில்துறையினருக்கும் ஏற்புடைய வகையில் அறிவியல் உண்மைகள் நிறுவப்படும் வரை,​​ சுற்றுச்சூழலுக்கும் மனித உடலுக்கும் தீமை விளைவிக்காது என்பதை ​ நீண்டகாலச் சோதனைகள் நடத்தி முடிவுகள் காணப்படும்வரை இந்த பி.டி.​ கத்தரிக்காயை நிறுத்தி வைப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.​ ​

இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இத்தனை நாள்களாக விவசாயிகள் போராடி வந்தனர்.​ ஆனாலும்,​​ அதே காரணங்களை அரசே தன் வாயால் சொல்லி,​​ நிறுத்தி வைப்பதுதானே அரசின் வழக்கம்.​ அந்த வழிவழி வந்த நடைமுறை மாறாமல்,​​ ஏதோ தாங்களாகவே நிறுத்தி வைப்பதைப்போல பி.டி.கத்தரிக்காயை மூட்டை கட்டி வைக்கத் தீர்மானித்தார்கள்.​ கடைசியாக,​​ இப்போதாகிலும் இத்தகைய நல்ல முடிவு எடுத்தார்களே என்பதற்காக மத்திய அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பி.டி.​ கத்தரிக்காய் தடை செய்ததில் வெற்றி அடைந்த களிப்பில் இன்னும் சில கடமைகளை வேளாண் போராளிகள் மறந்துவிடக்கூடாது.​ இந்தியாவில்,​​ கத்தரிக்காய் போன்று 46 வகை உணவுத் தாவரங்களுக்கு இத்தகைய மரபீனி மாற்று வடிவங்கள் சோதனை அடிப்படையில்,​​ ​ வளர்க்கப்பட்டு வருகின்றன.​ இவையும் மெல்லமெல்ல தலைகாட்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.​ இவற்றில் கத்தரிக்காய்போல,​​ அனைவராலும் உண்ணப்படும் முக்கிய பயிரான நெல் ரகமும் இருக்கிறது.

கத்தரிக்காய் மீதான எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால்,​​ சற்றே கிடப்பில் போடப்பட்ட மரபீனி மாற்று நெல் ரகங்கள் தற்போது வேறு வடிவம் கொள்ளவும்,​​ அவற்றை வீரிய ரகங்களாகச் சந்தைக்குள் கொண்டுவரவும் புதியபுதிய உத்திகளைக் கையாளுவார்கள் என்று சொல்லப்படுகிறது.​ இவை வீரிய ரகங்களாகச் ​ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால்,​​ அவற்றை பிரித்தறியும் திறன் நம்மில் பலருக்கும் கிடையாது.​ ஆகவே,​​ வேளாண் போராளிகள் இத்தகைய மரபீனி மாற்று ஆய்வுக்காக களத்தில் சாகுபடி நிலையில் உள்ள அனைத்துப் பயிர்களையும் கண்டறிந்து அத்தகைய சோதனை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பி.டி.​ கத்தரிக்காய் எதிர்ப்பு வெற்றியில் முடிந்ததற்கு காரணம்,​​ இதை அனைவரும் சாப்பிடுகிறோம் என்பதுடன் இப்பயிர் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது என்பதும்தான்.​ கத்தரிக்காய் அல்லாமல்,​​ சில மாநிலங்கள் மட்டுமே விளைவிக்கும் சில வகை உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக முழுமையான எதிர்ப்புத் தோன்றியிருக்காது.​ சில மாநிலங்களில் மட்டும் எதிர்ப்பு எழுந்து,​​ பிசுபிசுத்துப் போயிருக்கும்.

இத்தகைய குளறுபடிகள் அனைத்துக்கும் அரசையும் இதற்கான பொறுப்பு வகிக்கும் ஆட்சியாளர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.​ இந்தக் குளறுபடிக்கு மிகப்பெரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்களும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

பி.டி.​ கத்தரிக்காய் அறிமுகம்,​​ சாகுபடி இவற்றுக்கு மூல ஆதார நிறுவனம் மான்சாண்டோ.​ இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்கோ மூலமாகத்தான் இந்தியாவில் பி.டி,​​ கத்தரிக்காய் எடுத்துக்கொள்ளப்பட்டது.​ இது எந்த வித ஆபத்தையும் விளைவிக்காது என்று பரிந்துரை செய்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.​ ​

இந்திய ஆட்சியாளர்களைவிட,​​ இந்திய ஆராய்ச்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதில் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான்,​​ இத்தகைய தேவையற்ற மரபீனி மாற்று உணவுப் பொருள்கள் இந்தியாவுக்குள் நுழையக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள்,​​ இந்திய வேளாண் ஆராய்ச்சிக் ​ கழகம் ஆகியவற்றின் பல ஆராய்ச்சிகளுக்கு நிதிநல்கை பெருந்தகையாளர்களாக மான்சாண்டோ,​​ ஃபோர்டு போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.​ இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதோடு,​​ ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெறும் களப்பணிக்கு,​​ நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா,​​ அமெரிக்கா போன்ற நாடுகளைக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்லவும் செய்கிறார்கள்.​ இந்த ஆராய்ச்சியாளர்கள்தான் அரசு மற்றும் பல்கலைக்கழகப் பணிகளில் உயர் பதவிக்கு வருபவர்களும்!​ பழைய நட்பு புதுப்பிக்கப்படுகிறது.​ அன்பினால் நெருக்கடி தந்து,​​ ​ தங்களுக்குச் சாதகமான மரபீனி மாற்றுப் பயிர்களை இந்தியச் சந்தையில் நுழைக்கும் அனைத்து கருத்துருக்களையும் தயாரிக்க வைக்கிறார்கள்.​ பிறகுதான் ஆட்சியாளர்களை மயக்கும் வித்தையை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கையில் எடுக்கின்றன.

இந்த நிலைமை ஏற்படக் காரணம் இந்திய அரசு,​​ வேளாண் ஆராய்ச்சிகளுக்கு போதிய ஆர்வம் காட்டாமல்,​​ போதிய நிதி ஒதுக்காமல்,​​ இவ்வாறாக அன்னிய நிதிநல்கைகளைப் பெற்றுக்கொள்வதை அனுமதிப்பதுதான் என்றால் அது மிகையாகாது.​ இந்திய அரசுப் பணத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தவும்,​​ பன்னாட்டு நிதிநிறுவனம்,​​ அல்லது அத்தகைய தொடர்புகள் உள்ள நிறுவனங்களின் நிதிநல்கையைத் தவிர்ப்பதும் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ​ முழுக்க முழுக்க இந்தியத்தன்மையோடு நிலைத்து நிற்க நிச்சயம் உதவியாக இருக்கும்.

நன்றி/ தினமணி

Friday, February 26, 2010

உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை சிறு, குறு விவசாயிகளை சென்றடைகிறதா?











நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்


புது தில்லி, பிப்.25: மத்திய அரசு அளிக்கும் உயர்த்தப்பட்ட கொள்முதல் விலைகள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறதா என பொருளாதார ஆய்வறிக்கை சந்தேகம் எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கொள்முதல் செய்யும் நெல்,கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கணிசமாக உயர்த்தியது. இந்த பலன் சிறு, குறு விவசாயிகளைச் சென்றடைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

5 ஹெக்டேருக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாகக் கருதப்படுகின்றனர். நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் இத்தகைய பிரிவினரின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்.

2004-05-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 560 வழங்கப்பட்டது. இது தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது.

இதேபோல கோதுமையின் கொள்முதல் விலை 72 சதவீதம் உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ. 1,100 வழங்கப்படுகிறது.

பருப்பு வகைகளின் கொள்முதல் விலையும் குவிண்டாலுக்கு ரூ. 1,350-லிருந்து ரூ. 2,300 ஆக 65 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பாசிப்பயிறு விலை குவிண்டால் ரூ. 1,410-லிருந்து 96 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 2,760 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 1,410-லிருந்து 79 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 2,520 வழங்கப்படுகிறது.

எண்ணெய் வித்துகளுக்கும் இதே அளவில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சோயாபீன்ஸ், கடலை ஆகியவற்றின் கொள்முதல் விலை முறையே 50 சதவீதம் மற்றும் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு விலை கடந்த 5 ஆண்டுகளில் 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஒரு காரணம் என ஆய்வுக்குழு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று சமீபத்தில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் விலை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். பட்ஜெட்டுக்கு முந்தைய அறிக்கையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதேசமயத்தில் நுகர்வோரின் நலனைக் காப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி/தினமணி

Thursday, February 25, 2010

மேலும், ஒரு சுமை

ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து யூரியா உரத்தின் சந்தை விலை டன் ஒன்றுக்கு ரூ.480 உயர்கிறது. அதாவது ரூ.4830-லிருந்து ரூ.5310 ஆகப் போகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவை விளக்கிய மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இதைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

"யூரியா விலையை உயர்த்த வேண்டாம்' என்று இந்தியப் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். "நான் இப்போதும் விலை உயர்வை எதிர்க்கிறேன்' என்று மத்திய ரசாயன உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இதைப் பற்றி மத்திய அரசில் யாரும் பொருள்படுத்தியதாகவே தெரியவில்லை. மத்திய அரசில் பங்குகொண்டுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு அமைச்சராக இருப்பவருக்கு இதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரும் மரியாதையா?

நிச்சயமாக யூரியா விலை உயரப் போகிறது. அரசின் புதிய உரமானிய அணுகுமுறையால் மற்ற உரங்களின் விலையும் உயரத்தான் போகிறது. ஏற்கெனவே, உணவுப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் நிலையில், உரவிலை அதிகரிப்பால் மேலும் கட்டுக்கடங்காமல் போகப்போகிறது.

உலகில் அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் தேவைக்குப் போதுமானதாக இல்லை. 2008-09-ம் ஆண்டில் இந்தியா 68 லட்சம் டன் யூரியா, 20 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) இறக்குமதி செய்தது. ஆண்டுதோறும் இந்தியாவின் உரங்கள் தேவை சுமார் 2 சதவீதம் அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு இல்லாததால், குறிப்பாக யூரியாவின் தேவை ஆண்டுதோறும் 3 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தேவை அதிகம் என்பதால் உலகின் உர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு நல்ல சந்தை என்றுதான் பொருளாதார ஏடுகள் எழுதுகின்றன.

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2009-10-ம் ஆண்டில் வழக்கத்தைவிட 7.5 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் உற்பத்தி 12 சதவீதம் வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யூரியா விலை உயர்வு தேவைதானா? ஏற்கெனவே விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சரே தனது எதிர்ப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்யும் நிலையில், இத்தகைய முடிவு அவசியமா என்ற கேள்வி எழுகிறது.

உரமானியமாக 49,980 கோடி ரூபாய் அளிக்கிறோம் என்று மத்திய அரசும் நிதியமைச்சகமும் நீலிக்கண்ணீர் வடித்தாலும், அந்த மானியம் விவசாயிகளைச் சென்றவடைவது மிகமிகக் குறைவு என்பதும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான உரநிறுவனங்களுக்குத்தான் அதிகம் போய்ச் சேருகிறது என்பதும் விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

இயற்கை எரிவாயு அதிகம் கிடைக்காத நாடுகளால் யூரியா உற்பத்தி செய்ய முடிவதில்லை என்றும், அத்தகைய நாடுகள் இறக்குமதி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே யூரியாவைத் தயாரித்து விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஏனென்றால் இந்தியா போன்று யூரியா சந்தை கிடைப்பதென்றால் சாதாரண விஷயமா என்ன! ஆனால் அவர்கள் முன்வைக்கும் ஒரே நிபந்தனை, உரத்தின் விலையை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். உரத்தைப் பொதுச் சந்தையில் தாங்களே விற்பனை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.

யூரியாவின் விலையை உயர்த்துவது, உரங்களின் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்குவது, மானியத்தை விவசாயம் செய்யும் விவசாயிக்கு நேரடியாகக் கிடைக்காமல், உற்பத்தி செய்யும் உர நிறுவனங்களுக்கு அளிப்பது போன்ற குளறுபடியான கொள்கைகளால் இந்தியாவில் யாரோ சிலர் கொழிக்கவும், வேளாண்மை பாதிக்கவும் செய்கிறது. விவசாயிகள் மேலும் வறியவர்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள்.

யூரியா ஒரு டன்னுக்கு ரூ.480 விலை உயர்வு என்பது மிகமிகக் குறைவு என்றும், ஒரு கிலோவுக்கு வெறும் 50 காசுகள் அளவில்தான் விலை உயர்வு என்று சொன்னாலும், விவசாயிக்கு செலவு கூட்டும் ஒவ்வொரு காசும் ஒரு சுமைதான் என்பதை அரசு புரிந்துகொள்ளவில்லை.

தொழில்துறைக்குத் தாராளமான சலுகைகளை அள்ளி வழங்குகிறது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே நிறைவேற்றுகிறது. ஆனால், விவசாயி விளைவித்த பொருளுக்கு, அவன் செலவு செய்த மொத்தத் தொகையில் கூடுதலாக 50 சதவீதத் தொகையைச் சேர்த்து, ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும் என்று எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரை மட்டும் அரசின் கண்ணுக்கே தெரிய மாட்டேன் என்கிறது.

விவசாயிகளின் பொருளுக்கு கொள்முதல் விலையை எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரைப்படி நிர்ணயம் செய்துவிட்டு, யூரியாவுக்கு விலையை மத்திய அரசு உயர்த்துமானால் அந்த முடிவை யார் எதிர்க்க முடியும்? ஆனால் விவசாயிக்கு எதையுமே தராமல், சுமையை மட்டுமே கூட்டுவதென்றால் என்ன நியாயம்?

சென்ற ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், குறுவை சாகுபடிக்கு எல்லாரும் தயாரான நிலையில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. உரங்கள் பதுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகுதான் அரசு நடவடிக்கை எடுத்தது. இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், ஆந்திரத்துக்கு கடத்தப்பட்டதாக சில டன் உரமூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிலர் மீது நடவடிக்கையும் எடுத்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் என்ன ஆயிற்று? தண்டிக்கப்பட்டார்களா? யாருக்கும் தெரியாது.

இந்த ஆண்டும் அதேதான் நடக்கப் போகிறது. பழைய உரங்களைப் பதுக்கி வைத்து, புதிய உரத்தின் விலையோடு இன்னும் பதுக்கல் செலவுகளையும் சேர்த்துவைத்து விற்கப்போகிறார்கள்.

விவசாயிகள் களைகளைப் பிடுங்கிப் போடுகிறார்கள், பயிரைக் காப்பதற்காக. அரசாங்கமோ விவசாயிகளையே பிடுங்கி வீசுகிறது, பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக!

நன்றி>தினமணி

Tuesday, February 9, 2010

பி.டி.​ கத்தரிக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு

புது தில்லி,​​ பிப்.9:​ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.​ கத்தரிக்காயை வர்த்த ரீதியில் பயிரிடுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு பல்வேறு மாநிலங்கள்,​​ தன்னார்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் பயிரிடுவது தொடர்பாக விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.​ பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருப்பதால் அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

""பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.​ விவசாயிகளும் இதைப் பயிரிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.​ இத்தகைய சூழலில் அவசர அவசரமாக இதற்கு அனுமதி அளிப்பதில் அர்த்தமில்லை.​ மேலும் இந்த விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடனும் பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்தும் செயல்படவே விரும்புகிறது.​ இதைக் கருத்தில் கொண்டே,​​ இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,'' என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக தனது முடிவை புதன்கிழமை அறிவிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.​ ​

இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் அவசரம் காட்டக் கூடும் என்றும்,​​ பி.டி.​ கத்தரிக்காயை அனுமதிக்கும் விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,​​ செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,​​ தற்போதைக்கு பி.டி.​ கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவியல் ரீதியில் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடியால் எவ்வித சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படாது என்றும்,​​ இதை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நிரூபிக்கப்படும் வரை இதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக முடிவு எடுப்பது என்பது அறிவியலை சார்ந்துள்ளது.​ அத்துடன் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நலனையும் காக்க வேண்டியுள்ளது.​ இத்தகைய சூழலில் முடிவெடுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு எடுத்துள்ள முடிவானது பி.டி.​ கத்தரிக்காய்க்கு மட்டுமே பொருந்தும்.​ எதிர்காலத்தில் வர உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெண்டைக்காய் மற்றும் முட்டைகோஸ்,​​ நெல்,​​ தக்காளி ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்று அவர் குறிப்பிட்டார்.

பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக 7 பெருநகரங்களில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.​ பெரும்பாலான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எதிர்ப்பே தெரிவிக்கப்பட்டது.​ பல இடங்களில் எதிர்ப்பு அதிகரித்து கருத்துக் கேட்பு கூட்டம் பாதியிலேயே முடிந்துபோனது.

கடந்த மாதம் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் பேசும்போது,​​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பதற்கு முன் மக்களின் கருத்து கேட்டறியப்படும் என்று கூறினார்.​ அதனடிப்படையில்தான் பல நகரங்களில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

""கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்துமே வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்பட்டது.​ இவற்றில் பல பாதியிலேயே முடிந்தன.​ பலவற்றில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.​ இது தொடர்பான முடிவை பொதுமக்களிடமே விட்டுவிட்டேன்.​ தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணத்தையும் விளக்கிவிட்டேன்.​ எனது மனசாட்சி தெளிவாக உள்ளது,'' என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்திலும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றே தான் விரும்புவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மே 13-ம் தேதி இத்துறைக்குப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை பி.டி.​ கத்தரிக்காய் விதை தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எவரையும் தான் சந்தித்ததில்லை என்ற அவர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாக அவர் மேலும் கூறினார்.

​ ​ ஆந்திரம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு,​​ ""கத்தரிக்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் விளைவிக்கும் பிகார்,​​ ஒரிசா,​​ மேற்கு வங்க மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக,'' அவர் கூறினார்.

பாஜக மாநில முதல்வர்கள் அனைவரும் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

​ பி.டி என்பதன் விரிவாக்கம்பாக்டீரியம் பாசிலுஸ் துரிஞ்ஜியென்சிஸ் என்பதாகும்.​ இவ்விதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் கத்தரிக்காய் பி.டி.​ கத்தரிக்காய் என்றழைக்கப்படும்.​ இத்தகைய பி.டி கத்தரிக்காயை பூச்சி தாக்காது என்று விதை தயாரிப்பு நிறுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

மரபணு மாற்றம் செய்வதால் அதில் விஷத் தன்மை ஏற்படும் என்றும் இது மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து இதுகுறித்து ஆராயச் செய்தது.​ இந்தக் குழு 2007-ம் ஆண்டில் சோதனை ரீதியில் சாகுபடி செய்து பார்த்தது.​ இதனடிப்படையில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை 2009-ல் தொடங்க அனுமதி அளித்தது.

இது தவிர,​​ வெண்டைக்காய்,​​ நெல்,​​ தக்காளி ஆகியவற்றை பயிரிடுவது தொடர்பான ஆய்வுக்கும் அனுமதி அளித்துள்ளது.

2008-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியது.​ ​

மரபணு மாற்ற விதைகள் தயாரிப்பில் மேஹைகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.​ இந்நிறுவனம் வழக்கமாக பயிரிடும் கத்தரிக்காய்க்கு 50 முதல் 80 தடவை வரை பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது.​ இவை அனைத்தும் மனித உடலுக்குள்தான் செல்கிறது என்று அந்நிறுவனம் வாதாடி வருகிறது.

பி.டி.​ கத்தரிக்காய்,​​ பூச்சி தாக்குதலை மட்டுமே தடுக்கும்.​ மனித உடலுக்குக் கேடு விளைவிக்காது என்றும் அது கூறிவருகிறது.

பூச்சிகள் தாக்குதலிலிருந்து காப்பதற்காக மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்,​​ மனித உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது என்பதற்கு என்ன ஆதாரம் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தன்னார்வ நிறுவனங்கள் கோரி வருகின்றன.

நன்றி> தினமணி

Thursday, February 4, 2010

மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தால் ஒட்டுமொத்த இந்திய விவசாயமும் அழியும்: நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பிப்ரவரி 2:

இந்தியா விவசாயிகளின் சுயசார்பை அழித்து, பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மரபணு மாற்ற கத்தரிக்காயை (BT கத்தரிக்காய்) அனுமதிக்க கூடாது என நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நேற்று (02/02/2010) மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் ஒய்.டேவிட் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் முறையே

பேசில்லஸ் துருஞ்சியான்சிஸ் என்ற பாக்டீரியாவை கத்தரியின் மரபணுவோடு புகுத்தி உருவாக்கப்பட்டுள்ள மரபணு மாற்ற கத்தரிக்காய் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இதை பயிரிட்டால் நோய்கள் தாக்கப்படாது என கூறப்பட்டாலும் அது உண்மையென நிருபிக்கப்படவில்லை.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை மத்திய அரசு இதுவரை வெளியிடாமல் மூடிமறைத்து வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப்பற்றிய எந்தவிதமான அறிவியல் பூர்வ தகவல்களையும் வெளியிடாமல் மாண்சான்டோ - மகிகோ போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக நடந்து வருகிறது.

தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அங்கேரி, வெனிசுலா, பிரான்சு, இரசியா, நியுசிலாந்து போன்ற நாடுகள் எற்கெனவே மரபணு மாற்ற பயிர்களை ஏற்கெனவே தடைசெய்துள்ளன. இவை தவிர நமது நாட்டில் கேரளா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பீகார், கர்நாடகா மற்றும் ஒரிசா மாநில அரசுகள் மரபணு மாற்ற பரிசோதணைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்த துவங்கினால் விவசாயிகள் விதைகளுக்கு பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்கவேண்டும். பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த பாரம்பரிய விவசாய முறைகளை மாற்றுவதால் மண்வளம் கெட்டுப்போகும். ஏற்கெனவே இம்மதிரியான மரபணு மாற்ற பருத்தி விதைகளை சாகுபடி செய்த மகாராஷ்டிரா, ஆந்திரா விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடன்தொல்லை, தற்கொலை போன்ற விளைவுகள் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் ஏற்படும்.

குறிப்பாக பி.டி கத்தரிக்காய் பயிரிட்டால் அதிலுள்ள மகரந்தங்கள் தேனீக்கள், வண்ணத்து பூச்சி பொன்றவற்றால் அருகிலுள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள மற்ற பயிர்வகைகளில் மரபணு கலப்படம் நடக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த விவசாயம் பாதிக்கும். ஏற்கெனவே பி.டி ரக பயிர்களை பயிரிடும்போது 50-60 மீட்டருக்கு அப்பால்தான் மற்ற பயிர்களை பயிரிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60% சிறு, குறு விவசாயிகள் நிறைந்துள்ள நம்நாட்டில் சாதாரண விவசாயிகளின் நலனை கருதாது, பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக மத்திய அரசு துணை போகக்கூடாது. இந்தியாவில் மரபணு மாற்ற பயிர்களை எக்காலத்திலும் அனுமதிக்ககூடாது.

வறுமை மற்றும் பசி, பருவநிலை மாற்றம், பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகிய உலகளாவிய பிரச்சனைகளுக்கு மரபணு மாற்ற பயிர்கள் மூலம் தீர்வு காண முடியாது என ஐ.நா. சபை மற்றும் உலகவங்கி இணைந்து மேற்கொண்ட International Assessment of Agricultural Science, Technology and Development - IAASTD) ஆய்வில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பிற சமுக அமைப்புகள், விவசாயிகள் சங்கங்களுடன் வருகின்ற பிரவரி 6ம் தேதி நடைபெறவிருக்கின்ற மரபணு மாற்ற கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் அனுமதிப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்தரியும் கூட்டத்தில் கலந்துகொண்டு மரபணு மாற்ற கத்தரிக்காயை உடனே தடைசெய்ய வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மரபணு மாற்ற விவசாயம்

  • நமது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணவு தேவையை நிறைவு செய்யாது

  • பாதுகாப்பான உணவையோ, சத்தான உணவையோ வழங்காது

  • ஏற்கெனவே பசுமை புரட்சி என்ற பெயரில் சீர்கேடடைந்துள்ள மண்ணை மேலும் சீர்கேடடைய செய்யும்

  • நமது சூழலை பால்படுத்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும்

என்ற அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மானாவரி விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் மற்றும் சமூக செயல்பாட்டாலர்களை உள்ளடக்கிய நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் விவசாயிகள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுருத்துகிறது

  • மரபணு மாற்ற கத்தரிக்காயை உருவாக்கி இருக்கும் மாண்சாண்டோ நிறுவனத்தின் இந்திய ஏஜெண்ட் ஆனா மகிகோ (Maharastra Hybrid Company) நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொள்ளும் உயிரிகளின் பாதுகாப்பு குறித்த சோதனைகளை உரிய அளவில் நடத்தவில்லை என்ற அடிப்படையிலும், பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடுவதிலும் பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்தரிக்கு மரபணு மாற்றம் செய்வது என்பது இனி எதிர்காலத்தில் எல்லாப்பயிர்களுக்கு மரபணு மாற்றும் உள்நோக்கம் அடங்கியிருக்கிறது என்ற அடிப்படையிலும் மகிகோ மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என இந்த அமைப்பு கோறுகிறது.
  • மரபு மாற்று பயிரிடல் முறையால் பயிர்களின் பன்முகத்தன்மை அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 12000க்கும் மேலான அரிசிவகைகள் பயன்பாட்டில் இருந்தன. பசுமை புரட்சியின் விளைவாக அவை தற்போது வெறும் ஐம்பதுக்கும் குறைவான ரகங்களாக குறைந்து போயுள்ளன. கத்தரிக்காயில் 2000க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் உள்ளன. அரசின் பி.டி கத்தரிக்கான வர்த்தக ரீதியிலான அனுமதி என்ற முடிவு கத்தரியின் பல்லுயிர்தன்மையை அழிந்து போகச்செய்யும் என்ற அடிப்படையில் பி.டி. கத்தரியை தடைசெய்ய கோறுகிறோம்.
  • மரபணு மாற்ற விதைகள் தொடர்பாய் சாதரண மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளை விளக்க நம் வேளான் பலகலை கழக விஞ்ஞானிகள் முன்வரவேண்டும். அப்போது தான் பொதுமக்களும், விவசாயிகளும் பி.டி கத்தரிக்காய் தேவையா, தேவையில்லையா, தடைசெய்யவேண்டுமா என்ற முடிவை பகுத்தறிய முடியும். அதற்கு வேளான் விஞ்ஞானிகள் சாதாரண மக்கள், விவசாயிகள் தரப்புடன் இணைந்து விளக்கம் தர வேண்டும் என இவ்வமைப்பு கோறுகிறது.
  • மரபணு மாற்ற தொழில்நுட்பம் இயற்கையாக நடந்தவரை அறிவியலாக மட்டுமே இருந்தது. ஆனால் அந்த அறிவியல் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கி அறிவியல் மூன்றாம் உலகநாடுகளின் விவசாயிகளையும், நுகர்வோரையும் அடிமைப்படுத்தும் அரசியலாக மட்டுமே இன்று பார்க்கப்படுகிறது. விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் களவு போகின்றது என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசின் வேளாண் பல்கலைகழகங்கள், தனியாருடன் இணைந்து மரபணு மாற்று சோதனைகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம்
  • வேளாண்மை இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற காரணத்தினால் மரபணு மாற்ற பரிசோதனைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு. இதனை தடைசெய்யும் விதத்தில் மத்திய அரசு உருவாக்கி அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுத்தி வரும் தேசிய உயர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையத்தை தடைசெய்யவேண்டும் என இவ்வமைப்பு கோருகிறது.
  • மரபணு தொழில்நுட்பம் போன்ற நாட்டின் உணவு பாதுகாப்பு, உணவு உத்திரவாதம், இறையாண்மை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நாடுதழுவிய கருத்துக்கணிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக நாட்டுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் கிராம சபா தீர்மானங்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என இவ்வமைப்பு கோறுகிறது.மரபணு மாற்ற முறை விவசாயம், அதுதொடர்பான கள ஆய்வுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். மரபணு மாற்ற பயிர்கள் மீதான நீண்டகால பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே கள ஆய்வுக்கு அனுமதிக்கவேன்டும். அனுமதி பெறாமல், சட்டத்துக்குபுறம்பாக, உண்மையை மறைத்து, கள்ளத்தனமாக மரபணு மாற்ற ஆய்வில் ஈடுபட்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
  • இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அரசு அமெரிக்கா அரசுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம் போன்ற பகாசூர கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல், வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவது நமது உணவு இறையாண்மைக்கு எதிராக உள்ளமையால், இவ்வொப்பந்தங்களில் இருந்து இந்தியா அரசு தானே முன்வந்து விளகிக்கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறோம்.
  • மத்திய அரசு பன்னாட்டு கம்பெனிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய விவசாயத்தில் தலையிடுவதை தடுத்து, பாரம்பரிய விவசாய முறைகளையும், விவசாயிகளை பாதுகாக்கவேண்டும். குறிப்பாக நேயாற்ற சமுதாயத்தை உருவாக்கிட இயற்கை விவசாய முறைகளில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களுக்கு சரியான விளைநிர்ணயம் வழங்கிடவேண்டும்.