Friday, February 26, 2010

உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை சிறு, குறு விவசாயிகளை சென்றடைகிறதா?











நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்


புது தில்லி, பிப்.25: மத்திய அரசு அளிக்கும் உயர்த்தப்பட்ட கொள்முதல் விலைகள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சென்றடைகிறதா என பொருளாதார ஆய்வறிக்கை சந்தேகம் எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு கொள்முதல் செய்யும் நெல்,கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கணிசமாக உயர்த்தியது. இந்த பலன் சிறு, குறு விவசாயிகளைச் சென்றடைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

5 ஹெக்டேருக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாகக் கருதப்படுகின்றனர். நாட்டில் மொத்தமுள்ள 60 கோடி விவசாயிகளில் இத்தகைய பிரிவினரின் எண்ணிக்கை 80 சதவீதமாகும்.

2004-05-ம் ஆண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 560 வழங்கப்பட்டது. இது தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது.

இதேபோல கோதுமையின் கொள்முதல் விலை 72 சதவீதம் உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ. 1,100 வழங்கப்படுகிறது.

பருப்பு வகைகளின் கொள்முதல் விலையும் குவிண்டாலுக்கு ரூ. 1,350-லிருந்து ரூ. 2,300 ஆக 65 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பாசிப்பயிறு விலை குவிண்டால் ரூ. 1,410-லிருந்து 96 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 2,760 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 1,410-லிருந்து 79 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 2,520 வழங்கப்படுகிறது.

எண்ணெய் வித்துகளுக்கும் இதே அளவில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சோயாபீன்ஸ், கடலை ஆகியவற்றின் கொள்முதல் விலை முறையே 50 சதவீதம் மற்றும் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு விலை கடந்த 5 ஆண்டுகளில் 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஒரு காரணம் என ஆய்வுக்குழு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று சமீபத்தில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் விலை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். பட்ஜெட்டுக்கு முந்தைய அறிக்கையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதேசமயத்தில் நுகர்வோரின் நலனைக் காப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி/தினமணி

Thursday, February 25, 2010

மேலும், ஒரு சுமை

ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து யூரியா உரத்தின் சந்தை விலை டன் ஒன்றுக்கு ரூ.480 உயர்கிறது. அதாவது ரூ.4830-லிருந்து ரூ.5310 ஆகப் போகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவை விளக்கிய மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இதைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

"யூரியா விலையை உயர்த்த வேண்டாம்' என்று இந்தியப் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். "நான் இப்போதும் விலை உயர்வை எதிர்க்கிறேன்' என்று மத்திய ரசாயன உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இதைப் பற்றி மத்திய அரசில் யாரும் பொருள்படுத்தியதாகவே தெரியவில்லை. மத்திய அரசில் பங்குகொண்டுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு அமைச்சராக இருப்பவருக்கு இதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரும் மரியாதையா?

நிச்சயமாக யூரியா விலை உயரப் போகிறது. அரசின் புதிய உரமானிய அணுகுமுறையால் மற்ற உரங்களின் விலையும் உயரத்தான் போகிறது. ஏற்கெனவே, உணவுப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் நிலையில், உரவிலை அதிகரிப்பால் மேலும் கட்டுக்கடங்காமல் போகப்போகிறது.

உலகில் அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் தேவைக்குப் போதுமானதாக இல்லை. 2008-09-ம் ஆண்டில் இந்தியா 68 லட்சம் டன் யூரியா, 20 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) இறக்குமதி செய்தது. ஆண்டுதோறும் இந்தியாவின் உரங்கள் தேவை சுமார் 2 சதவீதம் அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு இல்லாததால், குறிப்பாக யூரியாவின் தேவை ஆண்டுதோறும் 3 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தேவை அதிகம் என்பதால் உலகின் உர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு நல்ல சந்தை என்றுதான் பொருளாதார ஏடுகள் எழுதுகின்றன.

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2009-10-ம் ஆண்டில் வழக்கத்தைவிட 7.5 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் உற்பத்தி 12 சதவீதம் வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யூரியா விலை உயர்வு தேவைதானா? ஏற்கெனவே விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சரே தனது எதிர்ப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்யும் நிலையில், இத்தகைய முடிவு அவசியமா என்ற கேள்வி எழுகிறது.

உரமானியமாக 49,980 கோடி ரூபாய் அளிக்கிறோம் என்று மத்திய அரசும் நிதியமைச்சகமும் நீலிக்கண்ணீர் வடித்தாலும், அந்த மானியம் விவசாயிகளைச் சென்றவடைவது மிகமிகக் குறைவு என்பதும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான உரநிறுவனங்களுக்குத்தான் அதிகம் போய்ச் சேருகிறது என்பதும் விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

இயற்கை எரிவாயு அதிகம் கிடைக்காத நாடுகளால் யூரியா உற்பத்தி செய்ய முடிவதில்லை என்றும், அத்தகைய நாடுகள் இறக்குமதி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே யூரியாவைத் தயாரித்து விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஏனென்றால் இந்தியா போன்று யூரியா சந்தை கிடைப்பதென்றால் சாதாரண விஷயமா என்ன! ஆனால் அவர்கள் முன்வைக்கும் ஒரே நிபந்தனை, உரத்தின் விலையை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். உரத்தைப் பொதுச் சந்தையில் தாங்களே விற்பனை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.

யூரியாவின் விலையை உயர்த்துவது, உரங்களின் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்குவது, மானியத்தை விவசாயம் செய்யும் விவசாயிக்கு நேரடியாகக் கிடைக்காமல், உற்பத்தி செய்யும் உர நிறுவனங்களுக்கு அளிப்பது போன்ற குளறுபடியான கொள்கைகளால் இந்தியாவில் யாரோ சிலர் கொழிக்கவும், வேளாண்மை பாதிக்கவும் செய்கிறது. விவசாயிகள் மேலும் வறியவர்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள்.

யூரியா ஒரு டன்னுக்கு ரூ.480 விலை உயர்வு என்பது மிகமிகக் குறைவு என்றும், ஒரு கிலோவுக்கு வெறும் 50 காசுகள் அளவில்தான் விலை உயர்வு என்று சொன்னாலும், விவசாயிக்கு செலவு கூட்டும் ஒவ்வொரு காசும் ஒரு சுமைதான் என்பதை அரசு புரிந்துகொள்ளவில்லை.

தொழில்துறைக்குத் தாராளமான சலுகைகளை அள்ளி வழங்குகிறது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே நிறைவேற்றுகிறது. ஆனால், விவசாயி விளைவித்த பொருளுக்கு, அவன் செலவு செய்த மொத்தத் தொகையில் கூடுதலாக 50 சதவீதத் தொகையைச் சேர்த்து, ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும் என்று எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரை மட்டும் அரசின் கண்ணுக்கே தெரிய மாட்டேன் என்கிறது.

விவசாயிகளின் பொருளுக்கு கொள்முதல் விலையை எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரைப்படி நிர்ணயம் செய்துவிட்டு, யூரியாவுக்கு விலையை மத்திய அரசு உயர்த்துமானால் அந்த முடிவை யார் எதிர்க்க முடியும்? ஆனால் விவசாயிக்கு எதையுமே தராமல், சுமையை மட்டுமே கூட்டுவதென்றால் என்ன நியாயம்?

சென்ற ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், குறுவை சாகுபடிக்கு எல்லாரும் தயாரான நிலையில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. உரங்கள் பதுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகுதான் அரசு நடவடிக்கை எடுத்தது. இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், ஆந்திரத்துக்கு கடத்தப்பட்டதாக சில டன் உரமூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிலர் மீது நடவடிக்கையும் எடுத்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் என்ன ஆயிற்று? தண்டிக்கப்பட்டார்களா? யாருக்கும் தெரியாது.

இந்த ஆண்டும் அதேதான் நடக்கப் போகிறது. பழைய உரங்களைப் பதுக்கி வைத்து, புதிய உரத்தின் விலையோடு இன்னும் பதுக்கல் செலவுகளையும் சேர்த்துவைத்து விற்கப்போகிறார்கள்.

விவசாயிகள் களைகளைப் பிடுங்கிப் போடுகிறார்கள், பயிரைக் காப்பதற்காக. அரசாங்கமோ விவசாயிகளையே பிடுங்கி வீசுகிறது, பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக!

நன்றி>தினமணி

Tuesday, February 9, 2010

பி.டி.​ கத்தரிக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு

புது தில்லி,​​ பிப்.9:​ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.​ கத்தரிக்காயை வர்த்த ரீதியில் பயிரிடுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு பல்வேறு மாநிலங்கள்,​​ தன்னார்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் பயிரிடுவது தொடர்பாக விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.​ பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியிருப்பதால் அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

""பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.​ விவசாயிகளும் இதைப் பயிரிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.​ இத்தகைய சூழலில் அவசர அவசரமாக இதற்கு அனுமதி அளிப்பதில் அர்த்தமில்லை.​ மேலும் இந்த விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடனும் பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்தும் செயல்படவே விரும்புகிறது.​ இதைக் கருத்தில் கொண்டே,​​ இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,'' என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக தனது முடிவை புதன்கிழமை அறிவிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.​ ​

இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் அவசரம் காட்டக் கூடும் என்றும்,​​ பி.டி.​ கத்தரிக்காயை அனுமதிக்கும் விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,​​ செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,​​ தற்போதைக்கு பி.டி.​ கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவியல் ரீதியில் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடியால் எவ்வித சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படாது என்றும்,​​ இதை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நிரூபிக்கப்படும் வரை இதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக முடிவு எடுப்பது என்பது அறிவியலை சார்ந்துள்ளது.​ அத்துடன் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நலனையும் காக்க வேண்டியுள்ளது.​ இத்தகைய சூழலில் முடிவெடுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு எடுத்துள்ள முடிவானது பி.டி.​ கத்தரிக்காய்க்கு மட்டுமே பொருந்தும்.​ எதிர்காலத்தில் வர உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெண்டைக்காய் மற்றும் முட்டைகோஸ்,​​ நெல்,​​ தக்காளி ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்று அவர் குறிப்பிட்டார்.

பி.டி.​ கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக 7 பெருநகரங்களில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.​ பெரும்பாலான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எதிர்ப்பே தெரிவிக்கப்பட்டது.​ பல இடங்களில் எதிர்ப்பு அதிகரித்து கருத்துக் கேட்பு கூட்டம் பாதியிலேயே முடிந்துபோனது.

கடந்த மாதம் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் பேசும்போது,​​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பதற்கு முன் மக்களின் கருத்து கேட்டறியப்படும் என்று கூறினார்.​ அதனடிப்படையில்தான் பல நகரங்களில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

""கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்துமே வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்பட்டது.​ இவற்றில் பல பாதியிலேயே முடிந்தன.​ பலவற்றில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.​ இது தொடர்பான முடிவை பொதுமக்களிடமே விட்டுவிட்டேன்.​ தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணத்தையும் விளக்கிவிட்டேன்.​ எனது மனசாட்சி தெளிவாக உள்ளது,'' என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்திலும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றே தான் விரும்புவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மே 13-ம் தேதி இத்துறைக்குப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை பி.டி.​ கத்தரிக்காய் விதை தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எவரையும் தான் சந்தித்ததில்லை என்ற அவர் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாக அவர் மேலும் கூறினார்.

​ ​ ஆந்திரம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு,​​ ""கத்தரிக்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் விளைவிக்கும் பிகார்,​​ ஒரிசா,​​ மேற்கு வங்க மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக,'' அவர் கூறினார்.

பாஜக மாநில முதல்வர்கள் அனைவரும் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

​ பி.டி என்பதன் விரிவாக்கம்பாக்டீரியம் பாசிலுஸ் துரிஞ்ஜியென்சிஸ் என்பதாகும்.​ இவ்விதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் கத்தரிக்காய் பி.டி.​ கத்தரிக்காய் என்றழைக்கப்படும்.​ இத்தகைய பி.டி கத்தரிக்காயை பூச்சி தாக்காது என்று விதை தயாரிப்பு நிறுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

மரபணு மாற்றம் செய்வதால் அதில் விஷத் தன்மை ஏற்படும் என்றும் இது மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து இதுகுறித்து ஆராயச் செய்தது.​ இந்தக் குழு 2007-ம் ஆண்டில் சோதனை ரீதியில் சாகுபடி செய்து பார்த்தது.​ இதனடிப்படையில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை 2009-ல் தொடங்க அனுமதி அளித்தது.

இது தவிர,​​ வெண்டைக்காய்,​​ நெல்,​​ தக்காளி ஆகியவற்றை பயிரிடுவது தொடர்பான ஆய்வுக்கும் அனுமதி அளித்துள்ளது.

2008-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பி.டி.​ கத்தரிக்காய் சாகுபடிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியது.​ ​

மரபணு மாற்ற விதைகள் தயாரிப்பில் மேஹைகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.​ இந்நிறுவனம் வழக்கமாக பயிரிடும் கத்தரிக்காய்க்கு 50 முதல் 80 தடவை வரை பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது.​ இவை அனைத்தும் மனித உடலுக்குள்தான் செல்கிறது என்று அந்நிறுவனம் வாதாடி வருகிறது.

பி.டி.​ கத்தரிக்காய்,​​ பூச்சி தாக்குதலை மட்டுமே தடுக்கும்.​ மனித உடலுக்குக் கேடு விளைவிக்காது என்றும் அது கூறிவருகிறது.

பூச்சிகள் தாக்குதலிலிருந்து காப்பதற்காக மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்,​​ மனித உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது என்பதற்கு என்ன ஆதாரம் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தன்னார்வ நிறுவனங்கள் கோரி வருகின்றன.

நன்றி> தினமணி

Thursday, February 4, 2010

மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தால் ஒட்டுமொத்த இந்திய விவசாயமும் அழியும்: நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பிப்ரவரி 2:

இந்தியா விவசாயிகளின் சுயசார்பை அழித்து, பொதுமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மரபணு மாற்ற கத்தரிக்காயை (BT கத்தரிக்காய்) அனுமதிக்க கூடாது என நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நேற்று (02/02/2010) மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் ஒய்.டேவிட் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் முறையே

பேசில்லஸ் துருஞ்சியான்சிஸ் என்ற பாக்டீரியாவை கத்தரியின் மரபணுவோடு புகுத்தி உருவாக்கப்பட்டுள்ள மரபணு மாற்ற கத்தரிக்காய் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இதை பயிரிட்டால் நோய்கள் தாக்கப்படாது என கூறப்பட்டாலும் அது உண்மையென நிருபிக்கப்படவில்லை.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை மத்திய அரசு இதுவரை வெளியிடாமல் மூடிமறைத்து வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப்பற்றிய எந்தவிதமான அறிவியல் பூர்வ தகவல்களையும் வெளியிடாமல் மாண்சான்டோ - மகிகோ போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக நடந்து வருகிறது.

தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அங்கேரி, வெனிசுலா, பிரான்சு, இரசியா, நியுசிலாந்து போன்ற நாடுகள் எற்கெனவே மரபணு மாற்ற பயிர்களை ஏற்கெனவே தடைசெய்துள்ளன. இவை தவிர நமது நாட்டில் கேரளா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பீகார், கர்நாடகா மற்றும் ஒரிசா மாநில அரசுகள் மரபணு மாற்ற பரிசோதணைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்த துவங்கினால் விவசாயிகள் விதைகளுக்கு பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்கவேண்டும். பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த பாரம்பரிய விவசாய முறைகளை மாற்றுவதால் மண்வளம் கெட்டுப்போகும். ஏற்கெனவே இம்மதிரியான மரபணு மாற்ற பருத்தி விதைகளை சாகுபடி செய்த மகாராஷ்டிரா, ஆந்திரா விவசாயிகளுக்கு ஏற்பட்ட கடன்தொல்லை, தற்கொலை போன்ற விளைவுகள் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கும் ஏற்படும்.

குறிப்பாக பி.டி கத்தரிக்காய் பயிரிட்டால் அதிலுள்ள மகரந்தங்கள் தேனீக்கள், வண்ணத்து பூச்சி பொன்றவற்றால் அருகிலுள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள மற்ற பயிர்வகைகளில் மரபணு கலப்படம் நடக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த விவசாயம் பாதிக்கும். ஏற்கெனவே பி.டி ரக பயிர்களை பயிரிடும்போது 50-60 மீட்டருக்கு அப்பால்தான் மற்ற பயிர்களை பயிரிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60% சிறு, குறு விவசாயிகள் நிறைந்துள்ள நம்நாட்டில் சாதாரண விவசாயிகளின் நலனை கருதாது, பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக மத்திய அரசு துணை போகக்கூடாது. இந்தியாவில் மரபணு மாற்ற பயிர்களை எக்காலத்திலும் அனுமதிக்ககூடாது.

வறுமை மற்றும் பசி, பருவநிலை மாற்றம், பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகிய உலகளாவிய பிரச்சனைகளுக்கு மரபணு மாற்ற பயிர்கள் மூலம் தீர்வு காண முடியாது என ஐ.நா. சபை மற்றும் உலகவங்கி இணைந்து மேற்கொண்ட International Assessment of Agricultural Science, Technology and Development - IAASTD) ஆய்வில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பிற சமுக அமைப்புகள், விவசாயிகள் சங்கங்களுடன் வருகின்ற பிரவரி 6ம் தேதி நடைபெறவிருக்கின்ற மரபணு மாற்ற கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் அனுமதிப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்தரியும் கூட்டத்தில் கலந்துகொண்டு மரபணு மாற்ற கத்தரிக்காயை உடனே தடைசெய்ய வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மரபணு மாற்ற விவசாயம்

  • நமது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணவு தேவையை நிறைவு செய்யாது

  • பாதுகாப்பான உணவையோ, சத்தான உணவையோ வழங்காது

  • ஏற்கெனவே பசுமை புரட்சி என்ற பெயரில் சீர்கேடடைந்துள்ள மண்ணை மேலும் சீர்கேடடைய செய்யும்

  • நமது சூழலை பால்படுத்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும்

என்ற அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மானாவரி விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் மற்றும் சமூக செயல்பாட்டாலர்களை உள்ளடக்கிய நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தமிழக விவசாயிகள் விவசாயிகள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுருத்துகிறது

  • மரபணு மாற்ற கத்தரிக்காயை உருவாக்கி இருக்கும் மாண்சாண்டோ நிறுவனத்தின் இந்திய ஏஜெண்ட் ஆனா மகிகோ (Maharastra Hybrid Company) நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொள்ளும் உயிரிகளின் பாதுகாப்பு குறித்த சோதனைகளை உரிய அளவில் நடத்தவில்லை என்ற அடிப்படையிலும், பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடுவதிலும் பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்தரிக்கு மரபணு மாற்றம் செய்வது என்பது இனி எதிர்காலத்தில் எல்லாப்பயிர்களுக்கு மரபணு மாற்றும் உள்நோக்கம் அடங்கியிருக்கிறது என்ற அடிப்படையிலும் மகிகோ மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என இந்த அமைப்பு கோறுகிறது.
  • மரபு மாற்று பயிரிடல் முறையால் பயிர்களின் பன்முகத்தன்மை அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 12000க்கும் மேலான அரிசிவகைகள் பயன்பாட்டில் இருந்தன. பசுமை புரட்சியின் விளைவாக அவை தற்போது வெறும் ஐம்பதுக்கும் குறைவான ரகங்களாக குறைந்து போயுள்ளன. கத்தரிக்காயில் 2000க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் உள்ளன. அரசின் பி.டி கத்தரிக்கான வர்த்தக ரீதியிலான அனுமதி என்ற முடிவு கத்தரியின் பல்லுயிர்தன்மையை அழிந்து போகச்செய்யும் என்ற அடிப்படையில் பி.டி. கத்தரியை தடைசெய்ய கோறுகிறோம்.
  • மரபணு மாற்ற விதைகள் தொடர்பாய் சாதரண மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளை விளக்க நம் வேளான் பலகலை கழக விஞ்ஞானிகள் முன்வரவேண்டும். அப்போது தான் பொதுமக்களும், விவசாயிகளும் பி.டி கத்தரிக்காய் தேவையா, தேவையில்லையா, தடைசெய்யவேண்டுமா என்ற முடிவை பகுத்தறிய முடியும். அதற்கு வேளான் விஞ்ஞானிகள் சாதாரண மக்கள், விவசாயிகள் தரப்புடன் இணைந்து விளக்கம் தர வேண்டும் என இவ்வமைப்பு கோறுகிறது.
  • மரபணு மாற்ற தொழில்நுட்பம் இயற்கையாக நடந்தவரை அறிவியலாக மட்டுமே இருந்தது. ஆனால் அந்த அறிவியல் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கி அறிவியல் மூன்றாம் உலகநாடுகளின் விவசாயிகளையும், நுகர்வோரையும் அடிமைப்படுத்தும் அரசியலாக மட்டுமே இன்று பார்க்கப்படுகிறது. விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் களவு போகின்றது என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசின் வேளாண் பல்கலைகழகங்கள், தனியாருடன் இணைந்து மரபணு மாற்று சோதனைகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம்
  • வேளாண்மை இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற காரணத்தினால் மரபணு மாற்ற பரிசோதனைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு. இதனை தடைசெய்யும் விதத்தில் மத்திய அரசு உருவாக்கி அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுத்தி வரும் தேசிய உயர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையத்தை தடைசெய்யவேண்டும் என இவ்வமைப்பு கோருகிறது.
  • மரபணு தொழில்நுட்பம் போன்ற நாட்டின் உணவு பாதுகாப்பு, உணவு உத்திரவாதம், இறையாண்மை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நாடுதழுவிய கருத்துக்கணிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக நாட்டுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் கிராம சபா தீர்மானங்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என இவ்வமைப்பு கோறுகிறது.மரபணு மாற்ற முறை விவசாயம், அதுதொடர்பான கள ஆய்வுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். மரபணு மாற்ற பயிர்கள் மீதான நீண்டகால பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே கள ஆய்வுக்கு அனுமதிக்கவேன்டும். அனுமதி பெறாமல், சட்டத்துக்குபுறம்பாக, உண்மையை மறைத்து, கள்ளத்தனமாக மரபணு மாற்ற ஆய்வில் ஈடுபட்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
  • இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அரசு அமெரிக்கா அரசுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம் போன்ற பகாசூர கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல், வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவது நமது உணவு இறையாண்மைக்கு எதிராக உள்ளமையால், இவ்வொப்பந்தங்களில் இருந்து இந்தியா அரசு தானே முன்வந்து விளகிக்கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறோம்.
  • மத்திய அரசு பன்னாட்டு கம்பெனிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய விவசாயத்தில் தலையிடுவதை தடுத்து, பாரம்பரிய விவசாய முறைகளையும், விவசாயிகளை பாதுகாக்கவேண்டும். குறிப்பாக நேயாற்ற சமுதாயத்தை உருவாக்கிட இயற்கை விவசாய முறைகளில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களுக்கு சரியான விளைநிர்ணயம் வழங்கிடவேண்டும்.